ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. அதன் பின்னர் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை நின்று போனது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் இந்த மாத மத்தியில் இருந்து பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தின. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 107.77 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 99.55 ரூபாய்க்கும், சிஎன்ஜி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆகியவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசு ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளைக் குறைத்துள்ளது. இதன் படி ஜூன் 1 முதல் அதாவது நாளை முதல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF - Aviation Turbine Fuel) ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரியை (SAED - Special Additional Excise Duty) குறைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்த ஏற்றுமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி ஒரு லிட்டருக்கு 3 ரூபாயில் இருந்து 1.5 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதி வரி ஒரு லிட்டருக்கு 16.5- ரூபாயிலிருந்து 13.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் ஏற்றுமதி வரி ஒரு லிட்டருக்கு 16-லிருந்து 9.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவிற்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான உள்நாட்டு வரியில் (Domestic Excise Duty) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, உள்நாட்டு விலைகள் இதனால் நேரடியாகக் குறையாது.
ஈரான் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதனால், இந்திய நிறுவனங்கள் லாப நோக்கில் எரிபொருட்களை வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, இந்தியாவிற்குள் தட்டுப்பாடு வராமல் தடுக்கவே இந்த ஏற்றுமதி வரிகள் ( Windfall Tax) கொண்டு வரப்பட்டன.
மத்திய அரசு பொதுவாக ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் சராசரியைக் கணக்கிட்டு, இந்த ஏற்றுமதி வரிகளை மாற்றியமைக்கும். அதன்படி, தற்போதைய சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்த வரியைக் குறைத்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

