டெல்லி: இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். முதல் குளோபல் பின் டெக் நாடாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரில் நடந்த சர்வதேச முதலீட்டாளார்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா வளரும் நாடு என்ற இலக்கில் இருந்து, வளர்ந்த நாடு என்ற இலக்கினை எட்ட நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா நிலவி வரும் சர்வதேச மந்த நிலைக்கு மத்தியிலும் பிரகாசமான நாடாக இருந்து வருகின்றது. நெருக்கடியான சவாலான நிலைகளை மிக சிறப்பாக கையாண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மூன்றாவது பொருளாதாரம்
உலகின் 5வது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா அடுத்த 4 - 5 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. ஆக விரைவில் இந்தியா ஒரு 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜி20 நாடுகளில் இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது என OECD அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம்
அது மட்டும் அல்ல, சர்வதேச நாடுகள் மந்த நிலைக்கு சென்று கொண்டு இருக்கும் நிலையில், இந்தியா அதனை எதிர்கொண்டு நேர்மறையான பாதையில் சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு அரசின் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
ஊக்குவிப்பு சலுகைகள்
குறிப்பாக மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம், பி எல் ஐ திட்டம் என பலவும் தொழில் துறையினரை ஊக்குவித்து வருகின்றது. இது மேற்கொண்டு ஒவ்வொரு துறையாக அலசி ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றது. மேலும் பல முக்கிய துறையிலும் தனியார் முதலீட்டினை அதிகரிக்க ஊக்குவித்து வருகின்றது. குறிப்பாக பாதுகாப்பு, சுரங்கம், ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட முக்கிய துறைகள் தனியாரின் பங்களிப்பினையும் ஊக்குவிக்கிறது.
பசுமை எரிசக்தியிலும் கவனம்
பசுமை எரிசக்தியினை ஊக்குவிக்கும் விதமாக அதிலும் கவனம் செலுத்தி வருகின்றது. சமீபத்தில் தேசிய ஹைட்ரஜன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. உலகளவில் பெரியளவில் தேவை இத்துறைக்கு உள்ளது. இதிலும் இந்தியா சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது என பிரதமர் மோடி கூறினார்.
டேட்டா அடிப்படையில் முதலிடம்
ஸ்மார்ட்போன் டேட்டா அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. குளோபல் பின்டெக் மற்றும் ஐடி பிபிஎன் போன்ற அவுட்சோர்ஸிங் விநியோகத்திலும் முதலிடத்தில் உள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய விமான சந்தையாகவும் உள்ளது. மூன்றாவது பெரிய வாகன சந்தையாகவும் உள்ளது.
எளிதில் தொழில் செய்யலாம்
இந்தியா தொடர்ந்து வலுவான ஜனநாயகம், அதிகளவிலான இளைஞர்கள், அரசியல் ஸ்திரத்தன்மை என பல சாதகமான காரணிகளால் இயங்கி வருகின்றது. அதோடு இந்தியாவில் எளிதாக மக்கள் வாழ்வதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கும் தேவையான நடடிக்கைகளை இந்தியா செய்து வருகின்றது.
மத்திய பிரதேசம் முக்கிய பங்கு
வளர்ந்த இந்தியாவினை உருவாக்குவதில் மத்திய பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆன்மீகம் தொடங்கி, விவசாயம், சுற்றுலா, திறன் மேம்பாடு என பல தனித்துவமான அம்சங்களை மத்திய பிரதேசம் கொண்டுள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார்.