இந்தியாவின் ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரைவில் இறக்குமதிக்கு இணையாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் டெக்ஸ்டைல் துறை ஏற்றுமதியில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி
2021-22 நிதியாண்டில் இந்தியா ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் மதிப்பு 44.4 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை பதிவு செய்துள்ளது என்று மத்திய தெரிவித்துள்ளது. இதில் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியும் அடக்கம், 2021 ஆம் நிதியாண்டில் 41 சதவிகிதமும், 2020 ஆம் நிதியாண்டில் 26 சதவீத உயர்வைப் பதிவு செய்தது.
44.4 பில்லியன் டாலர் ஏற்றுமதி
இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா 27 சதவீத பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் (18 சதவீதம்), வங்கதேசம் (12 சதவீதம்), யுஏஇ (6 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் படித்துள்ளது.
பருத்தி ஜவுளி ஏற்றுமதி
டெக்ஸ்டைல் தயாரிப்பு வகைகளைப் பொறுத்தவரை, பருத்தி ஜவுளி ஏற்றுமதி அளவு 17.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து மொத்த ஏற்றுமதியில் 39 சதவீதமாக உள்ளது. ரெடிமேட் ஆடைகளின் ஏற்றுமதி 16 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து 36 சதவீதமாகப் பங்கீட்டை பெற்றுள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல துறையைச் சேர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது. இதன் மூலம் அடுத்தச் சில வருடத்தில் இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் உயரும்.