கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், சர்வதேச விலைக்கு ஏற்ப கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றன.
இதனால் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதிகளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்த செஸ் வரி விதிக்கப்படாது.
இந்த செஸ் வரி உள்நாட்டு பெட்ரோல், எரிபொருள் விலைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
லாபம் சரியலாம்
எனினும் ஒரு நிதியாண்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் பீப்பாய்களுக்கு குறைவாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களுக்கு இந்த செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த வரி விதிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் லாபம் குறையலாம். எனினும் இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். எனினும் இந்த அறிவிப்பு வெளியான அந்த சமயத்திலேயே தனியார் சுத்திகரிப்பாளர்கள் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்த வரியானது எப்போது மீண்டும் குறையும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
எப்போது வரி குறையும்
சர்வதேச சந்தையில் தற்போதுள்ள நிலையில் இருந்து கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு, 40 டாலர்கள் குறைந்தால் மட்டுமே இந்த கூடுதல் வரியினை குறைக்க முடியும் என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கம்
வருவாயை அதிகரிக்கும் விதமாக ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தனியார் சுத்திகரிப்பாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி போன்ற நிறுவனங்களின் வருவாயினை பாதிக்கலாம. இதேபோல் ஓ என் ஜி சி, ரோஸ் நெப்ட் ஆயில் இந்தியா, வேதாந்தா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
15 நாட்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை வரி விதிப்பானது மதிப்பாய்வு செய்யப்படும் என பஜாஜ் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலையானது குறையும்போது வரிகள் குறையும். இது குறிப்பாக தற்போதுள்ள விலையில் இருந்து 40 டாலர்கள் குறைந்தால், இந்த வரி விகிதமானது குறையலாம்.
கச்சா எண்ணெய் நிலவரம்
குறைந்த உற்பத்தி, லிபியாவில் அமைதியின்மை மற்றும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருந்து வரும் நிலையில், உலகளாவிய மந்த நிலை குறித்த அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது 111.27 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே டபள்யூ டிஐ கச்சா எண்ணெய் விலையானது, 108.09 டாலராக காணப்படுகிறது.