இந்தியா ஏற்றுமதி நாடாக மாறி வந்தாலும் இன்னும் அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டு தான் இருக்கிறது. இந்த இறக்குமதிக்கு பெரும்பாலும் டாலர் அல்லது யூரோவில் பேமெண்ட்-ஐ செலுத்தும் காரணத்தால் ரூபாய் மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்து வருகிறது.
இதைச் சரி செய்ய உள்ளூர் நாணயத்தில் பணப் பரிமாற்றம் செய்யத் திட்டமிட்டு ரஷ்யாவுடன் ஏற்கனவே இதற்கான திட்டத்தைத் தீட்டியிருக்கும் நிலையில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளையும் இதில் இணைக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியமான பொருள் கச்சா எண்ணெய் ஆக இருக்கும் நிலையில் ரஷ்யாவுடன் ஏற்கனவே டீல் போட்ட இந்தியா தற்போது மாற்றத்தை அதிகம் விரும்பும் ஐக்கிய அரபு நாடுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியா
இந்தியா தனது பரிவர்த்தனை செலவைக் குறைக்கும் நோக்கிலும், வெளிநாட்டு நாணயங்களை அதிகம் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கிகள், ரூபாய் மற்றும் திர்ஹாமில் இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பது குறித்த ஆலோசனை செய்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் கூறுகையில், உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான கான்செப்ட் பேப்பர் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு பகிர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் முறைகள் குறித்து விவாதிக்கும் எனச் சுஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார்.
பேமெண்ட்
இந்தியாவின் இறக்குமதிக்கான பேமெண்ட்-ஐ ரூபாயில் செலுத்துவதன் மூலம் நாணய பரிவர்த்தனைகளின் செலவைக் குறைக்க முடியும். இதன் அடிப்படையில் தான் தற்போது கான்செப்ட் பேப்பர் பகிரப்பட்டு உள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏற்கனவே பிப்ரவரியில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன.
ப்ரீ டிரேட் ஒப்பந்தம்
இந்த ப்ரீ டிரேட் ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மற்றும் குறைக்கப்பட்ட கட்டணங்களில் ஏற்றுமதி, இறக்குமதியைச் செய்ய முடியும். இது இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என்ற நோக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
100 பில்லியன் டாலர்
இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய 60 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 100 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 43.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 16.7 பில்லியன் டாலர், இறக்குமதிகள் 26.7 பில்லியன் டாலர் மதிப்புடையவை. இதுவே 2019-20ல் 59.11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ரூபாய் - திர்ஹாம்
இந்த 40-60 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அமெரிக்க டாலர் வாயிலாக அல்லாமல் ரூபாய் - திர்ஹாம் மூலம் செய்யும் போது இரு நாடுகளுக்கும் பெரிய அளவிலான நன்மை கிடைக்கும். மேலும் அடுத்த 5 ஆண்டில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலரை தொடும் என்பதால் கூடுதல் பலன் அளிக்கும்.