இந்தியாவில் உபயோகப்படுத்தும் எரிபொருள் அளவில் 80% இறக்குமதி செய்யப்படுவது தான். இதே இயற்கை எரிவாயு தேவைகளில் 40% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் பதற்றத்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியை யாரும் ஈரானிடம் இருந்து செய்யக் கூடாது, மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டினார் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அப்படி என்ன ஈரான் மீது கோபமோ தெரியவில்லை. ஏனெனில் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பிரச்சனையாகவே இருந்து வந்தது.
ஈரான் பொருளாதாரம் சீர்குலைப்பு
ஒரு புறம் ஈரானுடன் மல்லுக் கட்டிக் கொண்டே, மறுபுறம் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார் டிரம்ப். அதாவது ஈரானிடம் யாரும் எண்ணெய் வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் அந்த நாடுகள் மீது பொருளாதார தடையை விதிப்பேன் என பயமுறுத்தினார். இதனால் பல நாடுகளும் இந்தியா உள்பட ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டன. இதனால் ஈரானின் பொருளாதாரம் அப்போது பெரும் பின்னடைவை சந்தித்தது என்றே கூறலாம்.
எண்ணெய் வாங்குவது தவிர்ப்பு
ஈரானுக்கு முக்கிய வருமான வாய்ப்பாக இருந்த எண்ணெய் ஏற்றுமதியிலேயே கைவைத்தது அமெரிக்கா. அத்தோடு நிறுத்தவில்லை. அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது. இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகள், அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆக ஈரானை பகைத்துக் கொண்டன. இதனால் இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து விட்டன. இந்த நிலையில் எண்ணெய் வர்த்தகத்தினை பெரிதும் நம்பியிருந்த பொருளாதாரம், சரிய தொடங்கியதும் ஈரான் ஆட்டம் காண தொடங்கியது.
ஈரான் மீது குற்றச்சாட்டு
எப்படியாவது ஈரானையும் தங்கள் வலைக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால் ஈரானோ அதற்கெல்லாம் அசைந்ததாக தெரியவில்லை. ஈரான் ஒரு புறம் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும், அதிலும் ஈரானில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் உதவியதாகவும் கருதியது. இந்த நிலையில் அணு ஒப்பந்தமும் ரத்தாகவே, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா.
இரண்டாவது முறை பொருளாதார தடை
ஒரு முறை பொருளாதார தடைக்கே ஆட்டம் காணத் தொடங்கிய நிலையில், ஈரானுக்கு இரண்டாவது முறையாக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. அதோடு ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இப்படி பிரச்சனை சென்று கொண்டிருந்த நிலையில், ஈரான் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது.
அடுத்து என்ன செய்யலாம்?
இதனால் இன்னும் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமெரிக்கா, ஈரானின் பாதுகாப்பு படையில் உள்ள கம்ப்யூட்டர்களை சைபர் அட்டாக் மூலம் தாக்குதல் நடத்தியதில் அனைத்து கம்ப்யூட்டர்களும் செயலிழந்ததாக கருதப்பட்டது. இது போதாது என்று இரண்டாவது பொருளாதார தடையினையும் விதித்தது அமெரிக்கா. .
உள்நாட்டு உற்பத்தி குறைந்து வருகிறது
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து அரசு வெற்றிகரமாக அரசாங்கங்கள் பேசியிருந்தாலும், நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் இந்தியா மேலும் அண்டை நாடுகளையே கையேந்தும் நிலையில் உள்ளது. கடந்த 2018- 2019ல் இந்தியா $111.9 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் $87.8 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. ஆக ஆண்டுக்கு ஆண்டு எண்ணெய் உபயோகம் அதிகரித்து வருவதும், அதற்காக செலவிடப்படும் தொகையையும் அதிகரித்து வருவதும் கவனிக்கதக்கது. இது இந்தியாவில் மிகப்பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஈரான் எண்ணெய்
இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கும் போது பல சலுகைகளை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவினால் அதை இந்தியா இழந்தது என்று தான் கூற வேண்டும். ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து, சவுதியில் இருந்து அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியா. இதனால் இந்தியா முந்தைய ஆண்டுகளில் கொடுத்ததை விட, நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய்க்காக அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு
எனினும் தற்போது கொரோனா காரணமாக அது அவ்வளவாக தெரிவிக்க வில்லை. இதற்கிடையில் தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பிடன் ஆட்சியில், இந்த தடை நீக்கப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நியாயமான விலையில் இறக்குமதி செய்யலாம் என்றும் பிரதான் கூறியுள்ளார்.