இந்தியா அனைத்து துறைகளிலும் தற்போது முன்னேறி வருகிறது என்பதும் நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியா தற்போது எஃகு உற்பத்தியில் உலகின் 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் மிக விரைவில் முதலிடத்தை பிடித்து விடும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது சீனா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முதல் இடத்தை அடைவதற்கு வெகு தூரம் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஃகு உற்பத்தி
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்த இந்திய கனிமங்கள் மற்றும் உலோக தொழில் குறித்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, 'தற்போது, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக உள்ளது என்றும், வரும் நாட்களில், உருக்கு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா முதலிடம்
தற்போதைய நிலையில் கச்சா எஃகு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் வெகுவிரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா எஃகு உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஏற்றுமதி
எஃகுக்கு நிகர இறக்குமதி செய்யும் நாடாக இருந்து இந்தியா உருக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது என்று கூறிய அமைச்சர் 2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் எஃகு நுகர்வு 57.8 கிலோவிலிருந்து 78 கிலோவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
300 மில்லியன் டன் இலக்கு
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி இலக்கை அடைய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று கூறிய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா உலகெங்கிலும் உள்ள துறைகளில் எஃகு முதன்மையான துறை என்றும், இது பொருளாதாரம், மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
கொள்கை வகுப்பதில் கவனம்
இந்தியாவை ஒரு எஃகு உற்பத்தி சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும், அதற்கான கொள்கை வகுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும், எஃகு துறையில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக விரைவில் மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications