சர்வதேச வர்த்தகச் சந்தையில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிகள் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், உலகின் பிற நாடுகளைப் போலவே இந்தியாவில் புதிய முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாகக் கிரிப்டோ சந்தைக்குள் முதலீடு செய்ய ஆர்வமுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு விரைவில் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வைத்துள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்து இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் தற்போது ரெட் ஹாட் முதலீட்டுத் தளமாக மாறி வரும் கிரிப்டோ சந்தையும், கிரிப்டோ சந்தை முதலீட்டாளர்களும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள உள்ளனர்.
கடுமையான கிரிப்டோகரன்சி சட்டம்
உலகிலேயே மிகவும் கடுமையான கிரிப்டோகரன்சி மசோதாவை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இப்புதிய மசோதா மூலம் கிரிப்டோகரன்சி மீது வர்த்தகம் செய்வது மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி வைத்திருப்பது, கிரிப்டோகரன்சி விநியோகம் செய்வது, கிரிப்டோகரன்சி உருவாக்குவது, கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்வது, கிரிப்டோகரன்சி வைத்துப் பொருட்களை வாங்குவது மற்றும் பணத்திற்குப் பதிலாகக் கிரிப்டோகரன்சியை ஏற்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட உள்ளது
தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை
ஜனவரி மாதமே மத்திய அரசு இந்தியாவில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் முழுமையாகத் தடை செய்துவிட்டு, இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான முறையில் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை உருவாக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தது.
கடுமையான கட்டுப்பாடுகள்
மத்திய அரசின் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் முடிவால் இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கிரிப்டோ வர்த்தகத்தில் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது .
அதிகப்படியான அபராதம்
மேலும் ஏற்கனவே கிரிப்டோ சந்தையில் முதலீடு கிரிப்டோகரன்சியை வைத்துள்ளவர்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கும், இந்தக் காலகட்டத்திற்குள் கிரிப்டோ முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் கிரிப்டோகரன்சிகளை விற்பனை செய்துவிட வேண்டும். இதற்கு முன் மத்திய அரசு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவது கட்டாயம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் எவ்விதமான எதிர்ப்புமின்றிப் பிற மசோதாக்களைப் போலவே இந்தக் கிரிப்டோகரன்சி மசோதாவுக்கும் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சீனாவிற்கு அடுத்து இந்தியா
இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால் கிரிப்டோகரன்சி வைத்திருப்பது குற்றம் என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா முதலாவதாக இருக்கும். சீனா கிரிப்டோகரன்சி உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்வதைத் தடை செய்துள்ள நிலையில், கிரிப்டோகரன்சி வைத்திருப்பதற்கு அபராதம் விதிக்கவில்லை.
பிட்காயின் விலை
இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 61,556.59 டாலர் என்கிற புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் தனது உச்ச அளவீட்டில் இருந்து சுமார் 59,247 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சரிவுக்கு இந்திய அரசின் முடிவும் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.