சில வாரங்களாகவே நாட்டில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், ஆங்காங்கே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பெரும் கலவரங்கள் வெடித்தன.
ரயில்கள், வாகனங்கள் எரிப்பு என பல சம்பவங்கள் அரங்கேறின. அக்னிபாத் திட்டம் பலருக்கும் வேலையின்மையை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது.
மொத்தத்தில் பற்பல எதிர்மறையாக கருத்துகள் அக்னிபாத் திட்டத்தினை சுற்றிலும் வலம் வந்தன.
இவ்வளவு விண்ணப்பமா?
இதற்கிடையில் இந்திய விமானத் துறையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 56,960 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த திட்டன்ம் ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாட்களில் இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வரவேற்பானது பல நகரங்களிலும் மோசமான போராட்டங்கள் நடந்துள்ள நிலையில், இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் அதிகரிக்கலாம்
இன்னும் வரவிருக்கும் நாட்களில் இந்த விண்ணப்பங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுலை 5 அன்று இந்த அக்னிவீர்களுக்கான விண்ணப்பத்திற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விமானத் துறையானது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பாதுகாப்பு படையில் அக்னிபாத்
பாதுகாப்பு படை நியமனங்களில் அக்னிபாத் திட்டத்தினை மத்திய அரசு ஜூன் 14 அன்று அறிவித்தது. இதன் மூலம் பாதுகாப்பு துறை வீரர்களின் நியமனங்களில் 25% ஒப்பந்த முறையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அக்னி வீர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் என அனைத்து சலுகையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
வயது ஏற்றம்
இதில் பல போராட்டங்கள் வெடிக்கவே அதிபட்ச வயதை 21ல் இருந்து 23 ஆக அதிகரித்தது அரசு. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை என 3 பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு (Regular cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்றும், இந்த 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11 லட்சம் ரூபாய்க்கு மேலாக கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அக்னி வீர் சேவா நிதி
4 ஆண்டுகளில் இந்த அக்னிவீர் கார்ப்பஸ்-க்கு (சேவா நிதிக்கு) நீங்கள் செலுத்தும் தொகை 5.02 லட்சம் ரூபாயாகும். இதே பங்கினை இந்திய அரசும் செலுத்தும். ஆக இறுதியால 4 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் சேர்த்து உங்காளுக்கு 11 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கலாம். இந்த சேவா நிதிக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இதுவும் ஊக்கமளித்திருக்கலாம்
பல போராட்டங்களுக்கு மத்தியில் பற்பல தொழிலதிபர்களும் அக்னிவீர்களுக்கு தங்களது நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறின. அரசும் மற்ற அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆக இதுவும் கூட இளைஞர்களின் அக்னிவீர் திட்டத்திற்கு விண்ணபிக்க ஊக்குவித்திருக்கலாம்.