அமெரிக்கா, மெக்சிகோ, பிரிட்டன், ஜெர்மனி போல இந்தியாவிலும், இந்திய மக்கள் மத்தியிலும் எலக்ட்ரிக் கார்களுக்கான மோகம் அதிகரிக்கத் துவங்கியது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த மக்கள் தாயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான எகோசிஸ்டம் இல்லாத போது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
டெஸ்லாவின் மாபெரும் வெற்றி
டெஸ்லாவின் வெற்றியைத் தொடர்ந்து உலக நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் மீதான கண்ணோட்டம் முற்றிலும் மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எலக்ட்ரிக் கார்களை ஒரு காலத்தில் பொம்மை கார்கள் எனச் சொன்ன பல பேர் டெஸ்லாவின் கார்களைப் பார்க்கு வியந்துள்ளார்கள். இதன் வாயிலாக இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
மேலும் இந்திய அரசு எலக்ட்ரிக் கார்களுக்குப் பல்வேறு சலுகைகளைக் கொடுக்கும் அதே வேளையில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கார் தயாரிப்பைத் துவங்கி வருகின்றனர். அடுத்த 5 வருடத்திற்காக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்திருப்பது எலக்ட்ரிக் கார்களுக்காகத் தான் என்பது கூடுதல் தகவல்.
எலக்ட்ரிக் கார்கள் மீதான ஈர்ப்பு
2020ஆம் ஆண்டில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ZS எலக்ட்ரிக் காரும், டாடாவின் நெக்சான் எலக்ட்ரிக் காரும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஈர்க்க தவறிவிட்டாரலும் கண்டிப்பாக இந்திய கார் பிரியர்களின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி, பஜாஜ் ஆட்டோ போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ள டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவின் எலக்ட்ரிக் சந்தை
அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்துவோருக்கு நாடு முழுவதும் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாகப் பயணம் செய்ய அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார்களைச் சார்ஜ் செய்யச் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது. இதனால் யார் வேண்டுமானாலும் எப்போதும் எவ்விதமான தடையுமின்றி எலக்ட்ரிக் கார்களை இயக்க முடியும்.
எலக்ட்ரிக் கார்களுக்கான எகோசிஸ்டம்
ஆனால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான எகோசிஸ்டம் இல்லாத போது அடுத்தடுத்து இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் போது கார் உரிமையாளர்களை நகரத்தின் எல்லைக்குள்ளேயே பூட்டி வைக்கும் அளவில் தான் உள்ளது.
2021ல் புதிய கார்கள்
அடுத்த ஆண்டு டாடா அல்டிராஸ் EV கார் சுமாப் 312 கிலோமீட்டர் செல்ல கூடிய அளவிற்கு சக்திவாய்ந்த காராக உருவாக்கியுள்ளது. இந்தக் காரின் மதிப்பு 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் என அறியப்படுகிறது.
இதேபோல் ஆடி ஈ-ட்ரான் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலும், மஹிந்திரா eKUV100 8.25 லட்சம் ரூபாயிலும், மஹிந்திரா XUV300 எலக்ட்ரிக் கார் 18 லட்சம் ரூபாயிலும், ஜாகுவார் I-pace கார் 1 கோடி ரூபாய் விலையிலும், மாருதி சுசூகி வேகன் ஆர் EV கார் சுமார் 9 லட்ச ரூபாயிலும் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
எல்என்ஜி எரிபொருள்
ஏற்கனவே இந்தியாவில் கனரக வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் எல்என்ஜி எரிபொருளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும், எல்என்ஜி பங்குகளை அமைக்கும் பணிகளையும் துவங்கியுள்ளது. இத்திட்டத்திற்காகச் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டா ஈர்க்கும் பணியில் மத்திய அமைச்சகம் இறங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் கார்களுக்கான எதிர்காலம்
இந்தியாவில் தற்போது ஒருபக்கம் எலக்ட்ரிக் கார்கள், மறுபுறம் எல்என்ஜி எரிபொருள் பயன்படுத்த ஊக்குவிப்பு என மொத்த ஆட்டோமொபைல் சந்தையும் மாறி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் கார்களுக்கான எதிர்காலம் பெரும் கேள்விகுறியாகவே உள்ளது.