தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த பணவியல் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.90% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளானது , கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
வட்டியை அதிகரித்த வங்கிகள்
அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி, பேங்க் ஆப் பரோடா, ஆர்பிஎல், ஃபெடரல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வியாழக்கிழமையன்று வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச் டி எஃப் சி-யில், வட்டி விகிதம் 7.55%ல் இருந்து ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையில் தாக்கம் ஏற்படுத்தலாம்
முன்னதாக ஹெச் டி எஃப் சி அதன் வீட்டுக் கடன் வாடிகையாளர்களுக்கு 6.7%ல் இருந்து வட்டியை கொடுத்து வந்தது. இது தொடர்ச்சியாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வீட்டுக் கடன்களுக்கான தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
இதே ஐசிஐசிஐ வங்கியானது ஜூன் 8 முதல் இபிஎல்ஆர் விகிதத்தினை50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.6% ஆக அதிகரித்துள்ளது. EBLR என்பது ரெப்போ வட்டி விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும். வணிக வங்கிகள் கடன் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி விகிதம் இதுவாகும். ஆக இது வாடிக்கையாளர்கள் இனி கூடுதலாக வட்டியினை செலுத்த வழிவகுக்கலாம்.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கியானது ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், ரெப்போ விகிதத்துடன் தொடர்புடைய கடன்களுக்கு வட்டி விகிதத்தினை 10% அதிகரித்துள்ளது.
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கியானது அதன் ஹோம் லோன்களுக்கான வட்டி விகிதம் தற்போது 8.55% ஆக ஆரம்பிக்கிறது. இது மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், இந்த வட்டி அதிகரிப்பானது வந்துள்ளது.
நிபுணர்களின் கருத்து என்ன?
இது குறித்து ரியல் எஸ்டேட் நிபுணர்கள் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், சொத்துகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. கொரோனாவுக்கு பிறகு தேவையானது படிப்படியாக மீண்டு வந்து கொண்டு இருந்த நிலையில், இந்த வட்டி விகிதமானது வளர்ச்சியில் தற்காலிகமாக ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கலாம் என கூறியுள்ளனர்.