இந்திய வங்கிகள் மிகவும் சவாலானக் காலகட்டத்திற்குத் தயாராக வேண்டும், அதிகரித்துள்ள வராக் கடன் அளவும், குறைந்து வரும் கடன் தேவையும் வங்கிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையைப் பார்க்கும் போது இந்திய வங்கிகள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி வருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் பங்குச்சந்தையிலும் வங்கித்துறை பங்குகள் மார்ச் மாத சரிவிலேயே இன்னமும் தடுமாறி வருகிறது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
2020ல் இந்திய வங்கிகள் வாரக் கடன் மற்றும் வர்த்தகப் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், மோசமான நிலையை அடையக் காத்திருக்கும் வங்கிகளுக்குப் பல்வேறு உதவிகளை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
குறிப்பாக வராக்கடனுக்குச் செல்லும் கடன்களுக்கான தகுதிகளைத் தளர்த்தியுள்ளது இதில் மிக முக்கியமானதாக விளங்குகிறது.
கொரோனா காலம்
பெரும்பாலான இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கொரோனா காலத்தில் வங்கிகள் சரிவில் இருந்து மீட்க அறிவிக்கப்பட்டவை, தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தளர்வுகளைத் திரும்பப் பெற்றால் இந்தியாவில் பல வங்கிகள் மோசமான நிலையை அடையும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
லாபம் சரிவு
தற்போதைய நிலையில் NBFC மற்றும் நிழல் வங்கிகளின் கடன் தரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் லாப அளவு பெரிய அளவில் பாதிக்கப்படும். மேலும் சந்தையில் கடன் தேவை அதிகளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வராக் கடன் அளவு
இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு மார்ச் மாதத்தில் 9.1 சதவீதம் வரையில் இருந்தது. செப்டம்பர் 2020ல் இதன் அளவு 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் தளர்வுகளைச் சில காலத்திற்குப் பின் திரும்பப் பெறும் போது வராக் கடன் அளவு மீண்டும் உயரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
6 மாத கடன் சலுகை
கொரோனா காலத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 6 மாத கடன் சலுகை அளிக்கப்பட்டதும், அதன் பின் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்பின் மூலம் வராக் கடன் அளவீடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது யாராலும் மறுக்க முடியாது.
இதேவேளையில் கொரோனாவுக்கு முன்பே இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் வராக்கடன் பெரிய பிரச்சனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த கடன் அளவு
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் வராக்கடனைக் குறைத்து இந்திய வங்கிகளை வலிமையான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால் மொத்த கடன் அளவில் குறைந்தபட்சம் 1.5 சதவீத தொகை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய்
இந்திய வங்கிகள் சுமார் 104 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளது, இந்நிலையில் வராக் கடன் பிரச்சனையைச் சமாளிக்க 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகை வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் தள்ளுபடி
தள்ளுபடி இதேவேளையில் இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் உடன் 2020ல் சுமார் 2.38 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய வங்கிகளின் வராக்கடன் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் 2021லும் இந்திய வங்கித்துறை மந்தமான நிலையிலேயே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.