கொரோனாவால் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், வர்த்தகத்திற்காகக் கடன் வாங்கிப் பல லட்ச நிறுவனங்கள் தற்போது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் கொடுத்த 6 மாத கடன் சலுகை காலமும் முடிந்த நிலையில் இந்திய வங்கிகளில் வராக்கடன் அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள், கடனை செலுத்தமுடியாத கணக்குகளை மறுசீரமைப்புச் செய்து தொடர்ந்து வர்த்தகத்தைத் தொடரவும், வராக்கடன் பிரச்சனையில் இருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் வாயிலாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5-6 முக்கிய வர்த்தகத் துறையைத் தேர்வு செய்து சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மறுசீரமைப்புச் செய்ய இந்திய வங்கிகள் தயாராகியுள்ளது.
முக்கியத் துறைகள்
கொரோனாவால் இந்தியாவில் சேவை துறைகள் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக விமானப் போக்குவரத்து, ரியல் எஸ்டேட் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி போன்ற துறைகள் வர்த்தகம் இல்லாமல் கடுமையான நிதி சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
எனவே வங்கிகள் தற்போது தேர்வு செய்துள்ள 5-6 முக்கிய வர்த்தகத் துறைகளில் விமானப் போக்குவரத்து, ரியல் எஸ்டேட் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை சார்ந்த நிறுவனங்களின் கடன்களையும் மறுசீரமைப்புச் செய்ய உள்ளது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஏற்கனவே வங்கிகளுக்கு ஆபத்தில் இருக்கும் கடன் கணக்குகளை மறுசீரமைப்புச் செய்ய அனுமதி கொடுத்துள்ள நிலையில், NBFC-க்கும் அனுமதி கொடுத்தார். இதன் பின்பு கடந்த வாரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாத கடன் மறுசீரமைப்புச் செய்யப் பணிகளைத் துவங்க அனுமதி கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
லாபம்
தற்போது செய்யப்படும் மறுசீரமைப்பு கடன் வாங்கியவர்களுக்கும் சரி, வங்கிகளுக்கும் லாபகரமான ஒன்றாக உள்ளது எனப் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மறுசீரமைப்பால் வர்த்தகங்கள் கடனில் மூழ்காமல் தொடர்ந்து இயங்க முடியும், இதேபோல் வங்கிகளின் கடனும் வராக்கடனாக மாறாமல் கடனை காப்பாற்ற முடியும்.
10 சதவீதம்
தற்போது வங்கிகள் 10 சதவீதம் கடனை தான் மறுசீரமைப்புச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக வராக் கடனாக இருக்கும் கடன்களுக்கு 15 சதவீதம் வரை மட்டுமே மறுசீரமைப்புச் செய்யப்படும்.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தில் மைக்ரோ, ஸ்மால், மீடியம் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனங்களும் என இதில் அடங்கும்.