இந்திய வங்கித்துறை அதிகரித்து வரும் வாராக் கடன், முதலீடுகள் வெளியேற்றம், வங்கிக் கடன் மோசடி, அடுத்தது வங்கிகள் திவாலாகும் நிலையிலும், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து 2020-21 நிதியாண்டு காலத்தில் வங்கித் துறை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
இது வரலாற்று உச்சம் என்பது தான் தற்போது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று அதிகமாக இருந்த 2021ஆம் நிதியாண்டில் தான் வர்த்தகச் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
இந்த நிலையிலும் வங்கிகள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்திய வங்கித்துறை
இந்திய வங்கித்துறை 2019ஆம் நிதியாண்டில் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்த வேளையில், 2021ஆம் நிதியாண்டில் 1,02,252 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி
இந்திய வங்கித்துறையின் மொத்த லாபத்தில் 50 சதவீதம் லாபத்தை ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய இரு வங்கிகள் மட்டுமே அளித்துள்ளது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி 18 சதவீத வளர்ச்சியில் 31,116 கோடி ரூபாயும், எஸ்பிஐ வங்கி 20,410 கோடி ரூபாயும் அளித்துள்ளது.
3வது இடத்தில் ஐசிஐசிஐ வங்கி கடந்த வருடத்தை விடவும் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து சுமார் 16,192 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
தனியார் வங்கிகள் ஆதிக்கம்
கொரோனா பாதிப்பின் காரணமாகவும், அதீத வாராக் கடன் வாயிலாகவும் 2021ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் தனது கடன் வர்த்தகத்தைக் குறைத்துக் கொண்ட நிலையில் தனியார் வங்கிகள் முந்திக்கொண்டது. இதனால் இந்திய வங்கித்துறையின் சந்தை ஆதிக்கம் சற்று அதிகமாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
அனைத்தையும் தாண்டி 5 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாகப் பொதுத்துறை வங்கிகள் மொத்தமாகச் சேர்ந்து லாபத்தை அடைந்துள்ளது. 12 பொதுத்துறை வங்கிகளில் வெறும் 2 வங்கிகள் மட்டுமே 2020-21 நிதியாண்டில் நஷ்டத்தை அளித்துள்ளது. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா 2020-21ஆம் நிதியாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.