2026 மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய பட்ஜெட், வெறும் வருவாய்-செலவின அறிக்கையிலிருந்து சீர்திருத்தம், நெருக்கடி மேலாண்மை மற்றும் பெரிய மாற்றங்களுக்கான சக்திவாய்ந்த கருவியாக பரிணமித்துள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களில், போர்கள், பற்றாக்குறைகள், அந்நியச் செலாவணி நெருக்கடிகள், தாராளமயமாக்கல், தொழில்நுட்ப, ஆட்சிமுறை சீர்திருத்தங்கள் என பல சவால்களுக்கு மத்தியில் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை, 1947 நவம்பர் 26 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். ரூ. 171 கோடி வருவாய், ரூ. 197 கோடி செலவில், பாதி தொகை அத்தியாவசிய பாதுகாப்புக்கே ஒதுக்கப்பட்டது. யஷ்வந்தராவ் பி. சவான் 1973-74 பட்ஜெட்டை பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், எண்ணெய் பிரச்சினைகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தார். ரூ. 550 கோடி நிதிப் பற்றாக்குறையால் "கருப்பு பட்ஜெட்" என அழைக்கப்பட்டது.

பிரணாப் முகர்ஜி 1983-84 பட்ஜெட்டில், மாநிலங்களுக்கு மத்திய நிதியை மக்கள் தொகை, பேச்சுவார்த்தையின்றி செயல்பாட்டின் அடிப்படையில் வழங்க முன்மொழிந்தார். இது பொதுச் செலவினங்களை பொறுப்புணர்வுடன் இணைக்கும் ஆரம்ப முயற்சியாக அமைந்தது. வி.பி. சிங் தாக்கல் செய்த 1985-86 மற்றும் 1986-87 பட்ஜெட்டுகள் தனிநபர் வருமான வரியை எளிதாக்குவதுடன், MODVAT முறையை அறிமுகப்படுத்தின. "கேரட் மற்றும் குச்சி பட்ஜெட்" எனப்பட்ட இது, சலுகைகளுடன் வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளையும் இணைத்து, தாராளமயமாக்கலுக்கு அடித்தளமிட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தியின் 1987-88 பட்ஜெட், நிறுவனத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. கல்விச் செலவை உயர்த்தி, செபிக்கு அடித்தளமிட்டது. யுடிஐ ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பிற பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இது மூலதனச் சந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
அந்நியச் செலாவணி நெருக்கடியில் மன்மோகன் சிங் தாக்கல் செய்த 1991-92 பட்ஜெட், 'சகாப்த பட்ஜெட்' எனப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் (LPG) கொள்கைகளை இது உறுதியாகத் தொடர்ந்தது. தொழில் உரிமம் நீக்கம், வர்த்தகத் தளர்வுகள், வெளிநாட்டு முதலீடு, பொதுத்துறை சீர்திருத்தம் என சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவே மிகவும் புரட்சிகரமான பட்ஜெட்.
1996-97 பட்ஜெட்டில், நிதியமைச்சர் பி. சிதம்பரம், இந்தியாவின் உள்கட்டமைப்பு நிதிப்பற்றாக்குறையைக் களைய IDFC-ஐ அறிவித்தார். நெடுஞ்சாலை நிதி வலுப்படுத்தப்பட்டது. பிரத்யேக ஆணையம் மூலம் பொதுத்துறை பங்களிப்பு நீக்கத்தை முறைப்படுத்தினார். சிதம்பரத்தின் "கனவு பட்ஜெட்", லாஃபர் வளைவு தர்க்கத்தைப் பயன்படுத்தி தனிநபர், நிறுவன வரி விகிதங்களைக் குறைத்தது. கலால், சுங்க வரிகளை எளிதாக்கி, மூலதனச் சந்தை சட்டங்களைச் சீர்திருத்தியது. தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சி எந்திரமாகி, இந்தியாவின் ஐ.டி. வளர்ச்சிக்கு வித்திட்டது.
யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த 1999-2000 பட்ஜெட், பொதுத்துறை சீர்திருத்தங்களை முறைப்படுத்தியது. முக்கியத்துவம் வாய்ந்த அலகுகளை வலுப்படுத்தி, முக்கியத்துவம் இல்லாதவற்றை தனியார்மயமாக்கியது. இது போட்டிச் சட்டச் சீர்திருத்தங்களைத் தூண்டி, 2002ஆம் ஆண்டு போட்டிச் சட்டம் உருவாவதற்கு வழிவகுத்தது.
2003-04 பட்ஜெட்டில் ஜஸ்வந்த் சிங், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார். இது அரசுகளை நிதிப் பற்றாக்குறை/கடன் இலக்குகளுடன் சட்டப்பூர்வமாகப் பிணைத்தது. பி. சிதம்பரம் 2004-05 பட்ஜெட்டில் கல்வி செஸ் வரியை அறிமுகப்படுத்தினார், இது வரி விதிப்பைப் பொது நலச் செலவினங்களுடன் இணைத்தது. வரி செலுத்துவோர்-அரசு சமூக ஒப்பந்தத்தை வலுபடுத்தி, பின்னர் மற்ற துறைகளுக்கும் இம்முறை விரிவுபடுத்தப்பட்டது.
உலக நிதி நெருக்கடிக்குப் பிந்தைய 2009-12 பட்ஜெட்டுகளில், பிரணாப் முகர்ஜி ஆதார் திட்டத்திற்கும், நேரடிப் பணப் பரிமாற்றத்திற்கான ஆரம்பத் திட்டங்களுக்கும் ஆதரவளித்தார். இவை 'ஜாம்' (ஜன் தன் – ஆதார் – மொபைல்) திட்டக் கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
அருண் ஜெட்லியின் 2017-18 பட்ஜெட், ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முந்தையதாகும். வரி இணைப்பைத் தாண்டி, ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் கூட்டாட்சி முடிவெடுக்கும் தன்மையை நிதி கட்டமைப்பில் நிலைநிறுத்தியது.
நிர்மலா சீதாராமனின் 2020-21 பட்ஜெட், தேசிய உள்கட்டமைப்பு திட்டம் மூலம் நீண்டகால திட்டமிடலில் கவனம் செலுத்தியது. மாற்று தனிநபர் வருமான வரி விதிப்பு முறையையும் அறிமுகப்படுத்தியது. முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், இந்தப் பட்ஜெட் உரை வரலாற்றில் மிக நீண்டதாக பதிவானது.
கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2021-22 பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் "நூற்றாண்டில் ஒருமுறை வரும் தருணம்" என்று விவரித்தார். இது குறுகியகால நுகர்வுச் சலுகைகளை விடுத்து, மூலதனச் செலவு, சுகாதாரப் பாதுகாப்பு, சொத்துகளைப் பணமாக்குதல், தனியார்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்தது.
சமீபத்திய 2025-26 பட்ஜெட், புதிய வரி முறையில் வரி அல்லாத வருமான வரம்பை உயர்த்தி, வரி சீர்திருத்தத்தை ஆழப்படுத்தியது. புதிய வருமான வரி மசோதா, டிடிஎஸ்/டிசிஎஸ் வரம்பு மறுசீரமைப்பு, 'ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0' மூலம் ஒழுங்குமுறை குற்ற நீக்கம் போன்றவற்றை முன்மொழிந்தது.வரும் 2026 பட்ஜெட் மூலதனச் செலவு, வரி எளிதாக்கம் ஆகியவற்றை வலுப்படுத்தும். உலக நிச்சயமற்ற தன்மை, காலநிலை நிதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் சவால்களுக்கும் இது பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications