தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் 10,000 வங்கதேச மக்கள், போலி அடையாள ஆவணங்களை வைத்துக்கொண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை என்ற இடத்தில், போலி ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கேரள முகவரியுடன் கூடிய ரேஷன் கார்டுகளை வைத்திருந்த 10 வங்க தேச நாட்டவரை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

உண்மையான அடையாள ஆவணங்களை போலவே இருக்கும் இந்த போலி ஆவணங்களை வெறும் 700 ரூபாய்க்கு ஒரு கும்பல் தயாரித்து வழங்கி வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கதேச நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை, வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான வங்கதேச மக்கள் எல்லையைக் கடந்து இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் போன்ற இடங்களுக்குள் நுழைகிறார்கள். அங்கு வைத்து தங்களுக்குத் தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
அதன்பின், சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் கூடுதல் கூலி கிடைக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்களாம். மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் கேரளாவுக்குள் வந்து, பின்னர் அங்குள்ள உள்ளூர் முகவரிகளைப் பயன்படுத்தி இந்திய குடிமக்களாகவே மாறுகின்றனர் என விசாரணையில் தெரிய வருகிறது.
பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெரிய மாஃபியா கும்பல் இந்த போலி ஆவணங்களைத் தயாரிப்பதில் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளனது. இவர்களிடம் இருக்கும் ஆதார், ரேஷன் கார்டு போன்றவை மிகத் துல்லியமாக அசல் கார்டுகள் போலவே தயாரிக்கப்படுவதால், எது போலி என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
கொட்டாரக்கரையில் பிடிபட்டவர்கள் பல வருடங்களாக கேரளாவில் வசித்து வந்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களைச் சோதனை செய்தபோது, அதில் வங்கதேச பாஸ்போர்ட்டுகளின் காபிகள் இருந்ததை வைத்தே அவர்கள் வங்க தேசத்தினர் என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவில் வருகை தருவோர் சில சமயம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றனர். இதற்கிடையே கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றப் பின்னணி கொண்டவர்களோ அல்லது தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களோ இருக்கிறார்களா என்று அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுமார் 10,000 வங்கதேச மக்கள் இது போல போலி ஆவணங்கள் மூலம் கேரளாவில் தங்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனால் கேரளாவின் பல பகுதிகளில் உள்ள வங்காளதேசத்தினர் தப்பியோடத் தயாராகி வருவதாகவும், பல இடங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரெனக் குறைந்துள்ளதாகவும் மாத்ரு பூமி செய்தி கூறுகிறது. இந்நிலையில் கேரளா முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கல் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications

