டெல்லி: ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் ஆயில் மற்றும் கேஸ் வணிகத்தில் உள்ள தங்களது பங்குகளை விற்று மேற்கத்திய நாடுகள் பலவும் வெளியேறியுள்ளன.
மேற்கத்திய நாடுகளின் இந்த அதிரடி முடிவினால், ரஷ்யா நிறுவனங்கள் பலவும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
எனினும் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள் விற்பனை செய்த பங்குகளை, இந்திய நிறுவனங்கள் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. ரஷ்ய அரசின் ஒப்புதலுக்காக இந்த நிறுவனங்கள் காத்துக் கொண்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரீமியம் விலையில் விற்கிறதா?
எக்ஸான்மொபில் மற்றும் பிபி போன்ற நிறுவனங்களில் மேற்கத்திய நாடுகளின் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி, அதன் பின்னர் அவற்றை பிரீமியம் விலையில் விற்பனை செய்ய உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவின் முதலீடு
இந்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் (OVL), பாரத் பெட்ரோசோர்சஸ் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்கனவே 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. இதில் கிழக்கு மற்றும் கிழக்கு சைபீரியா உட்பட சகலின் - 1, வான்கோர் மற்றும் தாஸ் யுரியாக் போன்ற பல எண்ணெய் சொத்துக்களும் அடங்கும்.
எந்த நிறுவனத்தில் முதலீடு
எக்ஸான்மொபில் ஆப்ரேட்டராக இருக்கும் சகலின் 1 ஹைட்ரோகார்பன் திட்டத்தில், ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் 20% பங்குகளை வைத்துள்ளது. ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட், ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோசோர்சஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள், ரோஸ்நெஃப்டின் துணை நிறுவனமான JSC வாங்கர்நெஃப்டில் 49.9% பங்குகளை வைத்துள்ளன.
இங்கிலாந்து நிறுவனத்தின் பங்கை வாங்கிய OVL
இது தவிர ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோசோர்சஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள், தாஸ் யூரியாக் நெஃப்டெகாசோடோபிச்சா நிறுவனத்தின் 29.9% பங்குகளை வைத்துள்ளன.
ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட், இங்கிலாந்தின் இம்பீரியல் எனர்ஜி கார்ப் நிறுவனத்தின் சைபீரியல் பங்குகளையும் வாங்கியுள்ளது.
பயனுள்ளது தான்?
இந்தியா தனது எண்ணெய் தேவையயில் 85%மும், எரிவாயு தேவையில் 54%மும் இறக்குமதி செய்து வருகின்றது. இத்தகைய சூழலில் அண்டை எண்ணெய் நாடுகளுடனான கூட்டணி என்பது, சப்ளையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இறக்குமதி செய்ய உதவும். ஆக மேற்கொண்டு இந்திய நிறுவனங்களின் முதலீடும் இந்தியாவுக்கு பயனுள்ளதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.