இந்தியாவில் ஐடி துறை உட்படப் பெரும்பாலான துறையில் அதிகச் சம்பளத்திற்காகவும், போட்டி நிறுவனங்களின் அழைப்புகள் காரணமாகவும் ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டு வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் திறம்பட நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
உதாரணமாக ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் அளவு 20-25 சதவீதமாக உள்ளது. இந்த முக்கியமான பிரச்சனையைச் சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இந்தியா நிறுவனங்களில் இருக்கும் வரலாறு காணாத ஊழியர்கள் வெளியேற்றத்தை (great resignation) சமாளிக்க ஊழியர்களுக்கு இந்த வருடம் ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு இருந்தாலும், கொரோனாவுக்கு முன்பு அளிக்கப்பட்ட 9.4 சதவீத சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளது.
9.4 சதவீத சம்பள உயர்வு
2021ல் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு சராசரி அளவீடு 8.4 சதவீதமாக இருந்த நிலையில் இந்த வருடம் 9.4 சதவீதமாக உயர்த்த இந்திய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகக் கார்ன் பெரி இந்தியா நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
வேரியபிள் பே
மேலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் பே அளவு கடந்த வரும் 65 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் 78 சதவீதம் வரையில் அளிக்க முடிவு செய்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று
இதேபோல் இந்த வருடம் ஒமிக்ரான் தொற்று அதிகமாக இருந்தாலும், அதன் பாதிப்பு அளவு குறைவாகவே இருக்கும் காரணத்தால் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் சந்தை பாதிக்காது என்ற பெரிய அளவில் இந்திய நிறுவனங்கள் நம்புவதாகக் கார்ன் பெரி இந்தியா நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது.
நிறுவனங்களின் நிலைப்பாடு
இந்த வருடம் இந்திய வர்த்தகச் சந்தை கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளும் என வேதாந்தா குரூப் மது ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார், இந்த வருடம் வர்த்தகச் சந்தை பாதிக்காது என்பதால் பானாசோனிக் இந்தியா ஊழியர்களுக்கு அதிகச் சம்பளத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் CHRO ஆதர்ஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
2019 டூ 2022
இந்திய நிறுவனங்களில் 2019ஆம் ஆண்டுச் சராசரி சம்பள உயர்வு அளவாக 9.25 சதவீதமும், 2020ல் 6.8 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 8.4 சதவீதமாகவும் இருந்த நிலையில் இந்த ஆண்டு 9.4 சதவீதம் வரையில் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக் துறை
மேலும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் டெக் துறையில் இந்த வருடம் சம்பள உயர்வு மட்டும் அல்லாமல் பதவி உயர்வு, போனஸ் ஆகியவை அதிகளவில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 சதவீத ஊழியர்கள்
இதற்கு முக்கியக் காரணம் இந்திய டெக் துறையில் தற்போது 40 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மாற்று வேலைவாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இதனால் சம்பள உயர்வு மிகவும் குறைவாக இருந்தால் கட்டாயம் ஊழியர்களின் வெளியேற்றம் மீண்டும் பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.