இந்தியாவில் 3வது கொரோனா தொற்று அலையின் வேகம் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் வைரஸின் வீரியமும் குறைவாக இருக்கும் காரணத்தால் வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை 2 வருட உச்சத்தைத் தொட காத்திருக்கிறது..
இந்தச் சூழ்நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டது. இதை உடனடியாக அமல்படுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ள காரணத்தால் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் 100 சதவீத ஊழியர்கள் உடன் இயங்க துவங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது பல துறையின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது.
3வது தொற்று அலை
இந்தியாவில் 3வது தொற்று அலையின் தாக்கம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் 2.5 வருடமாக அனுபவித்து வந்த வொர்க் பரம் ஹோம் முடியப்போகிறது.
முன்னணி நிறுவனங்கள்
ஐடிசி, மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி, ஆர்பிஜி குரூப், டெலாய்ட், காக்னிசன்ட் மற்றும் கேபிஎம்ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன அல்லது விரைவில் அழைக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கியுள்ளது.
தொற்று எண்ணிக்கை
திங்கட்கிழமை முதல் முறையாகப் பல மாதங்களில் முதல் முறையாகக் கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் முக்கியமான அல்லது அவசியமான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது.
ஹைப்ரிட் மாடல்
மேலும் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவதால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என நம்பும் காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல் பல நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை பின்பற்றவும் முடிவு செய்துள்ளது. இதனால் சுழற்சி முறையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களின் முடிவுகளுக்காகத் தான் மிகப்பெரிய ஊழியர்கள் கூட்டம் காத்திருக்கிறது. ஐடி நிறுவனங்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக முடிவை வெளியிட்டால் வர்த்தகச் சந்தையில் பல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.