இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்பு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை தங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் இனி பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் ஹைபிரிட் மாடல் முறையைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐடி துறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் பிற துறை நிறுவனங்களும் அதைப் பின்பற்ற துவங்கியுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று இந்தியாவில் பரவி 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையிலும், இன்னும் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்புடன் இயங்கி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ரிமோட் மற்றும் ஆன்-சைட்
இதன் படி மாருதி சுசூகி, செயின் கோபெயின், ஐடிசி, டாபர், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல், உபர், அமேசான், பிளிப்கார்ட், கேபிஎம்ஜி ஆகிய நிறுவனங்கள் 2022க்குப் பின் ஊழியர்களை ரிமோட் மற்றும் ஆன்-சைட்டில் வைத்து இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஹைபிரிட் மாடல்
அதாவது நிறுவனத்தின் ஒரு பகுதி ஊழியர்களை வீட்டில் இருந்தும், ஒரு பகுதி ஊழியர்களை அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் வைத்து இயங்கும் முறை தான் ஹைபிரிட் மாடல். மேலும் இந்த ஹைபிரிட் மாடலில் ஊழியர்களைச் சுழற்சி முறைாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் முறையைக் கொண்டு வர உள்ளது இந்திய நிறுவனங்கள்.
ஒமிக்ரான்
இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் கோட்டாக் மஹிந்திரா வங்கி, நெஸ்லே இந்தியா போன்ற சில நிறுவனங்கள் மீண்டும் வர்த்தகக் கூட்டம் மற்றும் வர்த்தகப் பயணங்களைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள் - ஊழியர்கள் நன்மை
இந்தச் சூழ்நிலையில் ஊழியர்களின் வேலை திறன் மற்றும் Work Life balance-ஐ ஈடுக்கட்ட இந்த ஹைபிரிட் மாடல் பெரிய அளவில் உதவும் என்றும், நிறுவனங்களுக்குப் பல வழியில் செலவுகள் குறைந்து அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும் என ஆய்வுகள் கூறுகிறது.
பிப்ரவரி 2022 முதல்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் 25/25 மாடல் திட்டத்தையும், இன்போசிஸ் ஹைபிரிட் மாடல் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. மேலும் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications