இந்தியாவில் 1992ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ரான்ட்ஸ்டேன்ட் நிறுவனம், நிறுவனங்கள் ஊழியர்களை நியமிக்கும் (Staffing) துறையில் முன்னோடி. இந்த நிறுவனத்தின் நிர்வாகம் பல மாறினாலும் தொடர்ந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய நிறுவனங்களில் அடுத்த சில வருடங்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து ரான்ட்ஸ்டேன்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பால் டூபிஸ் மற்றும் தலைமை நிதியியல் அதிகாரியான விஸ்வநாத் ஆகியோர் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்திய அரசின் முடிவு
இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அதை அரசு கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் தற்போது நிரந்தர வேலைவாய்ப்புகளைப் போலவே ஒப்பந்த வேலைவாய்ப்பு, பார்ட் டைம் வேலைவாய்ப்புகளை உருவாகவும் நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் அதை அரசு சட்டப்பூர்வமாக்கவும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இதனால் இந்திய நிறுவனங்கள் இனி வேலைவாய்ப்புகளைப் புதிய கோணத்தில் பார்க்கப்போகிறார்கள். அடுத்த சில வருடத்தில் நிரந்தர வேலைவாய்ப்புகளைப் போலவே ஒப்பந்த வேலைவாய்ப்பு, பார்ட் டைம் வேலைவாய்ப்பு என அனைத்து பிரிவிலும் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களுக்கு லாபம்
இந்த மாற்றம் தற்போதைய நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் சற்று குறைய வாய்ப்புகள் இருந்தாலும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த மாற்றம் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கக் கூடியதாகவும், விரைவாகப் பணிகளைச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 சதவீத அளவீட்டை தாண்டாது..!
தற்போது பல துறைகள், குறிப்பாக டெக், டிஜிட்டல், நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், கிக் ஊழியர்கள், ப்ரீலான்சர் ஊழியர்கள் நியமித்துள்ளனர். ஆனால் எந்த நாளும் இப்பிரிவு ஊழியர் எண்ணிக்கை மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்தைத் தாண்டாது எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கியத் துறைகளின் பாதிப்பு
இந்தக் கொரோனா காலத்தில் ஹாஸ்பிடாலிட்டி, டிராவல், டூரிசம் மற்றும் ஏவியேஷன் ஆகிய துறைகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாற்ற சற்றுத் தாமதமாகும், இதேபோல் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல தான் உயரும் எனத் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை
இந்திய அரசு ஒப்பந்த வேலைவாய்ப்புகளையும், பார்ட் டைம் வேலைவாய்ப்புகளையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ள நிலையில், இனி நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை என்பது சற்று குறைவாகவே இருக்கும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு அதிக வாய்ப்பு
இதனால் சந்தையில் ஒப்பந்த வேலைவாய்ப்புகளையும், பார்ட் டைம் வேலைவாய்ப்புகளையும் எண்ணிக்கை உயரும், இதேவேளையில் நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் பெரும்பாலான சலுகைகளும், பாதுகாப்பும் இப்பிரிவு ஊழியர்களுக்கும் கிடைக்கும்.