இந்தியா எப்போதுமே முரண்பாடுகள் நிறைந்த நாடாகவே இருந்து வருகிறது, எந்தத் துறையை எடுத்தாலும் சரி அனைவரும் சமம் என்ற நிலையைப் பார்ப்பது மிகவும் கடினம். குறிப்பாக வேலைவாய்ப்புச் சந்தையில் இந்தச் சமத்துவமின்மை மிகவும் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 16 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக உள்ளது, ஆனால் இதே நேரத்தில் கார்ப்பரேட் ஊழியர்கள் அதிகச் சம்பள உயர்வுகளைப் பெற்று வருகின்றனர்.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் மாதம் வரை 20 சதவீதம் வரையிலான அட்ரிஷன் விகிதம் உடன் போராடிக் கொண்டு இருந்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை, தற்போது உலகளாவிய தேவை மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாகப் புதிய பணியாளர்கள் நியமனம் டிசம்பர் காலாண்டில் 96 சதவிகிதம் குறைந்துள்ளது.
பணிநீக்கம்
இது மட்டுமா பன்னாட்டு நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள், கன்ஸ்யூமர் டெக் நிறுவனங்களில் இருந்து அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் காரணத்தால் பெரும் ஊழியர்கள் கூட்டம் கண்ணீரிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது.
30 சதவீதம் சம்பள உயர்வு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களின் ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டில் 30 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
இந்திய நிறுவனங்களில் சிறந்து விளங்கும் ப்ரொபஷனல்கள் 15 முதல் 30 சதவீதம் வரையிலான வருடாந்திர சம்பள உயர்வைப் பெறலாம். இது தான் ஒட்டுமொத்த ஆசியாவிலேயே அதிகப்படியான சம்பள உயர்வாகும்.
சராசரி அளவு
சராசரியாக, இந்திய நிறுவனங்களில் வருடாந்திர சம்பள உயர்வு பார்த்தால் இந்தியா இன்க் பணியாளர்களுக்கு 10 சதவீதமாக மட்டுமே உள்ளது.
818 நிறுவனங்கள்
சம்பள உயர்வு குறித்துச் சுமார் 818 நிறுவனங்களின் உலகளாவிய கணக்கெடுப்பின் முடிவுகள், எட்டு லட்சம் பேர் தகவல்களை வழங்கிய நிலையில் இதன் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆசியாவிலேயே அதிகப்படியான சம்பள உயர்வை இந்திய நிறுவனங்கள் அளிப்பது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது.
மும்பை, பெங்களூரு, டெல்லி
இதுவரை மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெரிய மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெற்று வந்த நிலையில், தற்போது ஹைப்ரிட் மாடல், பெரு நிறுவனங்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை அமைத்து வரும் வேளையில் சிறு நகரங்களின் சராசரி சம்பளமும் அதிகரித்துள்ளது.
வகைப்படுத்தப்பட்ட துறை
இந்தியாவைப் பொறுத்த வரையில் வகைப்படுத்தாத துறையில் தான் அதிகப்படியான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வகைப்படுத்தப்பட்ட துறையில் ஒட்டுமொத்த ஊழியர்களில் வெறும் 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் இந்த ஆய்வை வைத்து கணக்கிட முடியாது.
2023 பணிநீக்கம்
இந்த ஆய்வில் இந்தியாவில் 30 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது எனக் கூறப்படும் போது மகிழ்ச்சி அளித்தாலும், 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24,000 க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன, இது டெக் துறைக்கு மிகவும் மோசமான நாட்களாகப் பார்க்கப்படுகிறது.
சத்ய நாடெல்லா - மைக்ரோசாப்ட்
இன்று சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க அறிவிப்பில் சுமார் 11000 ஊழியர்களை இன்ஜினியரிங் மற்றும் HR பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்ய உள்ளது.