தங்கம் விலை நாளுக்கு நாள் மக்களைப் பயமுறுத்தும் நிலையில் தற்போது வைரம் வாங்குவோருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வைரங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரங்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்..? இதேவேளையில் கிரிசில் ரேட்டிங்க்ஸ் அமைப்பு முக்கியமான கணிப்பையும் வெளியிட்டு உள்ளது.
வைர தொழில்துறை
இந்திய வைர தொழில்துறையின் வருவாய் கடந்த நிதியாண்டில் பதிவான 10 வருட கால உயர்வுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் 15-20 சதவீதம் குறைந்து 19-20 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கிரிசில் ரேட்டிங்க்ஸ் தெரிவித்துள்ளது.
மந்தமான தேவை
சந்தையில் இருக்கும் மந்தமான தேவை, கோவிட் -19 தொற்றுக் காரணமாகச் சீனாவின் பல பிராந்தியங்களில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவித்தல் ஆகியவற்றின் காரணத்தால் வைரம் விற்பனை மற்றும் வர்த்தகம் இந்த ஆண்டுப் பெரிய அளவில் சரியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள்
இந்தியாவின் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் மிகப்பெரிய நுகர்வோரில் ஒன்றாக விளங்கும் சீனாவின் லாக்டவுன் அறிவிப்புகள் இத்துறையின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்தியா அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிகளவிலான வைரத்தை ஏற்றுமதி செய்கிறது.
வர்த்தகச் சந்தை
இதோடு வல்லரசு நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கொரோனாவுக்குப் பின்பு மக்கள் அதிகம் செலவு செய்யும் ஆர்வம் காட்டுவதால் பயணம் மற்றும் விருந்தோம்பல் போன்றவை மக்களுக்கு விருப்பமான செலவினங்களாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருக்கும் தேவையும் குறைந்துள்ளது.
வைரத்தின் விலை
இந்த வர்த்தக நெருக்கடிகள் அதிகமாக இருக்கும் வேளையில் வைரத்தின் விலைகளைப் பொறுத்தவரைப் பார்க்கும் போது உக்ரைன் மீதான போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள முக்கிய வைர வியாபாரிகள் மற்றும் பையர்கள் வைரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கான சான்றிதழ்களை வலியுறுத்துகின்றனர்.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்ய வைரச் சுரங்க நிறுவனமான அல்ரோசா மீதான அமெரிக்கத் தடைகள் மூலம் ரஷ்யாவில் இருந்து வெளியாகும் பாலிஷ் செய்யப்படாத வைரங்களின் விநியோகத்தைக் கிட்டத்தட்ட 30% குறைத்துள்ளன. இதனால் விலையும் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.