கொரோனா வைரஸ் எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் கடுமையாக பாதித்து இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை வழி மொழியும் விதத்தில், இந்த ஆண்டின், இரண்டாவது காலாண்டிலும், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி சரியலாம் என தன் மதிப்பீட்டைச் சொல்லி இருக்கிறது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி.
கடந்த மே 2020 மற்றும் ஜூன் 2020 மாதங்களில் காணப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், இந்த ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் குறையத் தொடங்கி இருப்பது போலத் தெரிகிறது. அதற்கு, மீண்டும் அறிவிக்கப்படும் லாக் டவுன்கள் ஒரு முக்கிய காரணம் என்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய டிமாண்டை, அரசு தரப்பில் இருந்து செய்யப்படும் நுகர்வுகள் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பிறகு, தனியார் நுகர்வு தான் பொருளாதாரத்தை பழைய நிலைக்குக் கொண்டு வரும் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
கொரோனா வைரஸ் பிரச்சனையின் தாக்கத்தினால், இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யக் கூடிய அளவில் (Potential Output), கட்டமைப்பு ரீதியாக சில சரிவுகளைக் காணலாம் (Structural Downshift) எனச் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ, முன்பே பல்வேறு சமயங்களில், இந்தியாவின் ஜிடிபி, குறைந்தபட்சமாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு (இரண்டு காலாண்டுகள்) சரிவைக் காணும் என மதிப்பிட்டு இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2008 பொருளாதார நெருக்கடி மனிதர்களால் உருவாக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது, 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வந்ததைப் போல இருக்காது. இந்த முறை பொருளாதாரம் பழைய நிலைக்கு வருவது கொஞ்சம் வித்தியாசமாகவும், மெதுவாகவும் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
2008 கால கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதற்கு முன்பு பல ஆண்டுகளாக நல்ல பொருளாதார வளர்ச்சியில் இருந்து போது வந்தது.
ஆனால் இப்போது கொரோனா வைரஸ் பிரச்சனை, ஏற்கனவே பொருளாதாரம் பல காலாண்டுகளாக மந்த நிலையில் இருக்கும் போது வந்திருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.