டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் அதே நேரத்தில், இந்திய பொருளாதாரம் பின்னடைவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதனை தெளிபடுத்தும் விதமாக இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 40 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இது நலிவடைந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த மேலும் ஒரு ஊக்கத்தொகையினை அடங்கிய ஊக்குவிப்பு திட்டத்தினை அரசு கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இது நலிந்து போயுள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கை 2021ம் நிதியாண்டில் 6.8 சதவீதம் சுருங்கலாம். எனினும் இது இரண்டாவது காலாண்டில் சற்று மீள்ச்சி அடையலாம் என்றும் கூறியுள்ளது. இதே மூன்று மற்றும் நான்காவது காலண்டில் இன்னும் நன்றாக வளர்ச்சி காணும் என்று எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே கிரிசில் அறிக்கையானது 2021ம் நிதியாண்டில் வளர்ச்சியானது 5 சதவீதம் குறையலாம் என்றும், இதுவே முதல் காலாண்டில் 25 சதவீதம் குறையும் என்றும் கணித்துள்ளது. எப்படி எனினும் எஸ்பிஐ இரண்டாவது காலண்டில் தேவை சற்று மீள்ச்சி அடையலாம் என்றும் தெரிவித்துள்ளது, சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக உள்ளது.
எனினும் வேலை இழப்பு, வருவாய் இன்மை தேவையினை குறைத்தாலும், மூன்றாம் மற்றும் நான்காவது காலாண்டில் இதனை தடுக்க அரசு உன்னிப்பாக கவனிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஆக இந்த வருடத்தின் பிற்பகுதியில் மற்றொரு ஊக்குவிப்பு திட்டம் இருக்கலாம். ஏற்கனவே 20 லட்சம் கோடிக்கான ஊக்குவிப்பு தொகையினை அறிவித்தது.
ஆனால் இதில் நிதி ஊக்கத்தொகை 2 லட்சம் கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளனர். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் என்றும் கூறியுள்ளனர்.
கொரோனா காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 30.03 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 90% சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா 15.6% நஷ்டத்துடனும், தமிழ்நாடு 9.4% நஷ்டத்துடனும், குஜராத் 8.6% நஷ்டத்துடனும் உள்ளது. ஏனெனில் இந்த மாநிலங்களில் தான் இன்று கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளது என்றும் கூறியுள்ளது. அதே போல கொரோனாவின் தாக்கம் ஜூன் கடைசி வாரத்தில் தான் குறைய ஆரம்பிக்கும் என்றும் கூறியுள்ளது.