நடப்பு ஆண்டினை கொரோனா என்னும் அரக்கன் வாரி சுருட்டிக் கொண்டது. கொரோனாவிடமிருந்து மீட்டெடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. எனினும் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம்
சரிவினையே சந்திக்கலாம் என்று பல நிபுணர்களும் மதிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சமீப நாட்களாக 2022ம் நிதியாண்டிற்கான கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்த ஆண்டில் வளர்ச்சியானது நல்ல வளர்ச்சி விகிதத்தினை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பிரிக்ஒர்க் நிறுவனத்தின் கணிப்புகளைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
ஜிடிபி கணிப்பு
இந்த நிலையில் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7.7 சதவீதம் சரிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பீடுகள் 7 - 7.5 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மதிப்பீடுகள் திருத்தங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி குறித்தான குறிகாட்டிகள்
அப்படி திருத்தம் செய்யப்படும்போது மேல் நோக்கிய திருத்தமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகள் மீட்சியடைந்து வருகின்றன. எனினும் கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பும், நுகர்வும் கூர்மையான சரிவுடன் காணப்படுகிறது. இது நடப்பு நிதியாண்டில் 11 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பினை கண்டிருக்கலாம். இது மொத்த ஜிடிபியில் நீண்டகால தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் அதிக நேரமாகும்
அதோடு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் வரை கட்டாயம் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இந்த சமூக இடைவெளியானது தேவையை பாதிக்ககூடும். அதோடு பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ச்சி பாதைக்கு திரும்ப இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
2022ம் ஆண்டில் எதிர்பார்ப்பு
பொருளாதார வளர்ச்சிகள் மெதுவான வேகத்தில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்து கொண்டுள்ளன. லாக்டவுனில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில துறைகள் தவிர, மீண்டும் பல துறைகள் சமூக இடைவெளி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் Brickwork Ratings ஏஜென்சி நடப்பு நிதியாண்டின் பாதியில் சற்று பொருளாதாரம் மேம்படலாம் எனத் தெரிவிக்கின்றது.
தடுப்பூசி ஆதரவாக அமையலாம்
எனினும் சில துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. எப்படி இருப்பினும் அடுத்த நிதியாண்டில் கொரோனா தடுப்பூசியினால், பொருளாதாரம் மீண்டு வரலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது அடுத்த நிதியாண்டில் 11% வளர்ச்சி காணலாம் என்றும், இதே நடப்பு ஆண்டில் 7.7% வீழ்ச்சி காணலாம் என்றும் அறிவித்துள்ளது.
விவசாயத் துறை
நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி பரவாயில்லை என்றாலும், எதிர்பார்ப்பினை விட சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நடப்பு ஆண்டில் 4% இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 3.4%
குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் இது முந்தைய கடந்த ஆண்டை காட்டிலும் இது நல்ல வளர்ச்சி தான். அடுத்த நிதியாண்டிலும் விவசாயத்துறையில் வளர்ச்சி பெரியலவில் மாற்றம் காணாமல் 3.5% ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான வளர்ச்சி எதிர்பார்ப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே உற்பத்தி துறையானது பெரும் அழுத்தத்தினை கண்டது. எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியான வளர்ச்சி இருந்து வருகின்றது. அதன் செயல்பாடுகள் கிட்டதட்ட கொரோனாவுக்கு முன்பு போல செயல்பட ஆரம்பித்துள்ளன. பிஎம்ஐ விகிதமானது தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மீண்டு வர ஆரம்பித்துள்ளது. இதேபோல ஐஐபி டேட்டாவும் சாதகமாக வந்து கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு துறையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆக தொழில் துறை வளர்ச்சியானது 2022ம் வளர்ச்சியானது 11.5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
சேவை துறை எதிர்பார்ப்பு
நடப்பு ஆண்டில் கொரோனாவின் காரணமாக சேவைத்துறையானது பெரும் சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக டிராவல், சுற்றுலா துறை, ஹாஸ்பிட்டாலிட்டி துறையானது பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதோடு உலக பொருளாதாரமும் கொரோனாவின் காரணமாக பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதோடு நிலவி வரும் அரசியல் பதற்றம், சமூக இடைவெளி இத்துறையில் வளர்ச்சியினை தாமதப்படுத்துகிறது. போக்குவரத்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சேவை துறையில் வளர்ச்சி
எப்படி இருப்பினும் ஒரு முறை பொருளாதாரமானது ஏற்றம் காண தொடங்கி விட்டால், இத்துறைகள் விரைவில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்ஹோட்டல்கள், போக்குவரத்து துறை, சுற்றிலா துறை வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இத்துறை 2022ல் 11 - 12% வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.