கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போதாது என்று தான் சொல்ல வேண்டும். வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என எவ்விதமான வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்துள்ளது.
கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், மக்களின் உடல்நலம் என அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
இந்தப் பாதிப்பில் இருந்து இந்தியா எப்போது முழுமையாக வெளியேறும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இந்தியா முழுமையாக வெளியில் வர இந்தியாவுக்கு இன்னும் 12 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ. 52 லட்சம் கோடி
தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட ரூ. 52 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது, என ரிசர்வ் வங்கி "நாணயம் மற்றும் நிதி அறிக்கை 2021-'22" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ஒவ்வொரு நிதியாண்டு அடிப்படையில் கணக்கிட்டால்2020-21ல் ரூ.19.1 லட்சம் கோடியும், 2021-22ல் ரூ.17.1 லட்சம் கோடியும், 2022-23ல் ரூ.16.4 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது.
பொருளாதார வளர்ச்சி விகிதம்
மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகித அடிப்படையில் பார்க்கும் போது 2020-21 ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி (-) 6.6%, 2021-22 க்கு 8.9 % மற்றும் 2022-23 க்கு 7.2% வளர்ச்சி விகிதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிதியாண்டில் 7.5% மேல் வளர்ச்சி அடையும் என எடுத்துக்கொண்டால் இந்தியா தனது கோவிட்-19 இழப்பில் இருந்து 2034-35ல் முழுமையாக வெளியேற முடியும் என ரிசர்வ் வங்கி அறிக்கை கூறியது.
காலாண்டு முடிவுகள்
கொரோனா தொற்று அடுத்தடுத்த அலைகள் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பாதித்து வருகிறது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலாண்டு முடிவுகளில் இதன் தாக்கத்தைப் பார்க்கப்படுகிறது.
2034-35 நிதியாண்டு
இதன் மூலம் ஒவ்வொரு நிதியாண்டின் வளர்ச்சி உடன் கூடுதலான வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகளைத் தீர்க்க முடியும். அந்த வகையில் இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள 2034-35 வரையில் தேவைப்படும் என ஆர்பிஐ கணித்துள்ளது.