டெல்லி: கடந்த ஒரு வருடமாக இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய பேச்சுகள், விவாதங்களை நாம் அதிகம் காண முடிகிறது. காரணம் பொருளாதார மந்த நிலை.
இந்தியாவின் பொருளாதார சரிவை, அப்பட்டமாக பொது மக்களுக்கு காட்டிக் கொண்டு இருக்கிறது ஆட்டோமொபைல் துறை. கடந்த ஒரு வருட காலமாக வாகனங்கள் விற்பனை சரிவு. உற்பத்தி செய்த வாகனங்களை விற்க முடியாமல் தத்தளிக்கிறார்கள் ஆட்டோமொபைல் கம்பெனிகள்.
ஆட்டோமொபைல் துறையில் மட்டும் சுமார் 30,000 பேருக்கு மேல், டீலர்கள் வழியாக மட்டும் வேலை இழந்து இருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால், அடுத்த சில வருடங்களுக்குள் சுமார் 5 - 10 லட்சம் பேர் தங்கள் வேலையை இழக்கலாம் என ஆட்டோமொபைல் துறை சார்ந்தவர்களே நம்மை பலமாக எச்சரித்தது நினைவிருக்கும்.
இந்திய பொருளாதாரம்
மேலே சொன்னது எல்லாம் ஒரு சிறிய உதாரணம் தான். அமைப்பு சாராத எத்தனையோ தினக் கூலிகள், அன்றாடம் கூலி வேலை பார்ப்பவர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என பல தரப்பட்ட எளிய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நடுத்தர மக்களுக்கோ வேறு பிரச்சனை. அந்த பிரச்சனையின் பெயர் லே ஆஃப்.
நடுத்தர மக்கள்
இதே கால கட்டங்களில் நடுத் தர மக்களாக இருப்பவர்களுக்கு, அடுத்த மாதம் சம்பளம் வாங்க முடியுமா..? என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. வீட்டுக் கடன் இ எம் ஐ, க்ரெடிட் கார்ட் கட்டணங்கள் என கடனிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கோண்டு இருக்கிறார்கள்.
லே ஆஃப்
நடுத்தர மக்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் லே ஆஃப் பூதம் தலை விரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 20,000 பேர் லே ஆஃப், காக்னிசண்ட் 7 - 10 ஆயிரம் பேர் லே ஆஃப், கேப் ஜெமினியில் 500 பேர் லே ஆஃப் என தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இத்தனை கொடூரம்
இந்த 2019-ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டிலும் சுமாராக 5 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வந்ததற்கே இத்தனை பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி.
கணிப்பு
2019-ம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் ரியல் ஜிடிபி சுமார் 4.3 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது. ஆக கடந்த இரண்டு காலாண்டுகளில் வந்த 5 சதவிகித ஜிடிபியை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமடையாலம் என, தன் தினசரி பொருளாதார அறிக்கையில் சொல்லி இருக்கிறது டிபிஎஸ்.
காரணங்கள்
இந்தியாவில் இப்போது வரை அதிகரிக்காத நுகர்வை (Consumption) முதல் பெரிய காரணமாகச் சொல்கிறார்கள். அதோடு, தனியார் நிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதால், நுகர்வு மந்த நிலை தொடர்கிறது. இந்த நுகர்வு மந்த நிலை, இந்த காலாண்டிலும் நீடிக்கலாம் என தன் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறது டிபிஎஸ் வங்கி.
நோ புதிய திட்டங்கள்
அதோடு, இந்தியாவில் புதிய வியாபாரம் திட்டங்களை அறிவிப்பதும் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறதாம். அதோடு நுகர்வு குறைவால், உற்பத்தியும் சரிந்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த உற்பத்தி மந்த நிலை, குறிப்பாக கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், கன்ஸ்யூமர் நான் டியூரபிள்ஸ் போன்ற துறைகளில் அதிகமாக இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது டிபிஎஸ்.
ஆர்பிஐ
சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கைகளில் கூட, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நுகர்வோர் சென்டிமென்ட் குறைந்து இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. அதோடு அரசுக்கு வரும் வரி வருவாய்கள் சரிந்து இருப்பது அடிக்கோடு போடுகிறார்கள். இந்த வரி வருவாய் குறைவு, இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து இருப்பதை அப்பட்டமாக காட்டுவதாகச் சொல்கிறார்கள்.
கடன்
மேலே சொன்னவைகள் எல்லாம் போக, ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், அதன் கடன் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம் என்பார்கள். இந்தியாவின் கடன் வளர்ச்சியைப் பார்க்கும் போது, பெரிய வளர்ச்சி காட்டவில்லை. புதிதாக வாராக் கடன்கள் வந்துவிடக் கூடாது என வங்கிகள் கடன் கொடுக்கும் விதிமுறையை அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வியாபாரம்
இந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் குறைந்து இருக்கிறது. மறு பக்கம், தங்கம் மற்றும் எண்ணெய் தவிர மற்ற பொருட்களுக்கான இறக்குமதியும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. ஆக இந்தியாவில் இறக்குமதி செய்த பொருளை வாங்க ஆள் இல்லை என்பதால் இறக்குமதி குறைந்து வருவதை இங்கு உணர முடிகிறது.
வரட்டும்
மேலே சொன்ன படி, புதிய திட்டங்கள் சரிவு, வேலை வாய்ப்பு பிரச்சனை, லே ஆஃப் பிரச்சனை, கடன் வளர்ச்சி குறைவு, ஏற்றுமதி இறக்குமதி குறைவு, நுகர்வு சரிவு, உற்பத்தி சரிவு போன்ற எல்லா பிரச்னைகளுக்கான விடை, வரும் 29 நவம்பர் 2019 அன்று மாலை காத்து இருக்கிறது. 2019-ம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் (செப்டம்பர் 2019), இந்தியாவின் ஜிடிபி, எவ்வளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என பார்த்துவிடுவோம். அது வரை காத்திருப்போம்.