கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோய், இன்றைய உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது.
உலக பொருளாதார நடவடிக்கைகளில், இந்தியா அதிகம் பங்கு எடுக்காததால், இந்தியாவுக்கு பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகள் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது ப்ளூம்பெர்க்.
அதோடு கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்கு சில நன்மைகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது ப்ளும்பெர்க். அப்படி என்ன சொல்லி இருக்கிறார்கள் என விரிவாகப் பார்ப்போம்.
சீனா
கொரோனா வைரஸ் என்கிற நோய் புயல், சீனாவில் தான் மையம் கொண்டு இருக்கிறது. ஆனால் உலகின் பல நாடுகளுக்கும் பரவிக் கொண்டு இருக்கிறது. இதனால் பல பொருளாதார எதிர் வினைகளையும் நாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன பொருளாதார வளர்ச்சி, இந்த மார்ச் காலாண்டில் குறையலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்திய ஜிடிபி
அப்படி சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி 1.2 % வரை சரிந்தால், இந்திய பொருளாதாரத்தின் டிமாண்ட் வழியாக சுமார் 0.4 - 0.5 சதவிகிதம் வரை ஜிடிபி பாதிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள். சீன பொருளாதாரம் மந்தமானால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் மந்தமாகும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாட்டு பொருளாதாரம் மந்தமாகுமாம்.
இந்தியாவுக்கு பாதுகாப்பு
இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு நன்றாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது எனவும் ப்ளூம்பெர்க்கின் முதன்மைப் பொருளாதார வல்லுநர் டாம் ஓர்லிக் (Tom Orlik) சொல்லி இருக்கிறார். இந்தியா உலக பொருளாதாரம் சப்ளை செயின்களில் அதிகம் பங்கெடுக்கவில்லை. அதோடு உலக ஏற்றுமதியிலும் அதிகம் பங்கு எடுக்காததால் அதிகம் பாதிப்புகள் இருக்காது என்கிறார்கள்.
இந்தியாவுக்கு லாபம்
மாறாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிவால், குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும். இது எல்லாம் இந்திய பொருளாதாரத்துக்கு கொரோனா பாதிப்பால் கிடைக்கும் நன்மைகள் எனச் சொல்லி இருக்கிறார். எது எப்படியோ, இந்திய பொருளாதாரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாது என்பதைக் கேட்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.