உலகில் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருந்த பொருளாதாரங்களில் ஒன்று இந்தியப் பொருளாதாரம்.
ஆனால் இந்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 3.2% வரை சரியலாம் எனக் கணித்து இருந்தது உலக வங்கி. இந்தியாவின் ஜிடிபி 3.2 சதவிகிதத்தை விட அதிகமாக வீழ்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறது உலக வங்கி.
ஏன் இப்படி திடீரென தன் கணிப்பை தானே மாற்றுகிறது? இதற்கு உலக வங்கி சொல்லும் காரணங்கள் என்ன என்பதை எல்லாம் விளக்கமாகப் பார்ப்போம்.
இந்தியா குறித்த அப்டேட்
தற்போது இருக்கும் பொருளாதார இண்டிகேட்டர்களைப் பார்த்தால், இந்தியப் பொருளாதாரம் இன்னும் பழைய நிலைக்கு வந்ததாகத் தெரியவில்லை என்கிற உலக வங்கி. India Development Update, 2020 என்கிற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது உலக வங்கி. இந்த அறிக்கையில், க்ரெடிட் ரிஸ்க் குறித்துப் பேசி இருக்கிறது.
வங்கி தனியார்மயம் & தனியார் முதலீடுகள்
கடன் வாங்கிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், கொரோனா பிரச்சனையால், கடனுக்கான தவணைகளைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சில அரசு வங்கிகளை முழுமையாக தனியார்மயமாக்குவது, மற்ற வங்கிகளில் தனியார் துறை முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது உலக வங்கி அறிக்கை.
வறுமை பிரச்சனை
இந்தியா, கடந்த பல ஆண்டுகளாக, வறுமையில் இருந்து, இந்திய மக்களை வெளியே கொண்டு வர பல நடவடிக்கைகளை எடுத்தது. இப்போதும் எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும் கண்டது. ஆனால் இந்த கொரோன வைரஸால், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்படலாம் என்கிறது உலக வங்கியின் அறிக்கை.
எப்போது கணிப்பு
உலக வங்கி, இந்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியா எவ்வளவு ஜிடிபி வீழ்ச்சி காணும் என்கிற கணிப்பை, அக்டோபர் 2020-ல் வெளியிட இருக்கிறார்களாம். ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் முதன்மை புள்ளியியல் அதிகாரி பிரனாப் சென் இந்தியாவின் ஜிடிபி இந்த 2020 - 21 நிதி ஆண்டில் 12.5 % வரை வீழ்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார். இக்ரா அமைப்பு 9.5 %, இந்தியா ரேட்டிங்ஸ் 5.3 % வீழ்ச்சி காணலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
முக்கிய காரணங்கள்
அக்டோபர் 2020 கால கட்டத்தில், பல புதிய விவரங்கள் கிடைக்கும். குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால், சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் லாக் டவுனிலேயே இருக்கும் விவரங்கள் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறது உலக வங்கி அமைப்பு.
உலக வங்கி எச்சரிக்கை
மிக முக்கியமாக, இந்தியா, தன் வரிக் கொள்கைகளைப் (Tariff Policy) பயன்படுத்தி, சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற நினைக்கும் நிறுவனங்களைக் கவர்வதை எச்சரிக்கிறது உலக வங்கி. இந்தியா தன் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்ய, வரிக் கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வர்த்தகக் கொள்கைகளைப் (Trade Policy) பயன்படுத்த பரிந்துரை செய்து இருக்கிறது உலக வங்கி.