உலகமே கொரோனா பயத்தால் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கிறது. உலகின் ஆறு கண்டங்களிலும் கொரோனா பரவி இருக்கிறது.
இதனால் உயிர் பலி அதிகரித்துக் கொண்டே இருப்பது ஒரு சோகமான விஷயம் என்றால், இந்த ஒரு வைரஸால், அன்றாட வர்த்தக நடவடிக்கைகளும் பெரிய அளவில் தடைபட்டுக் கொண்டு இருக்கிறது.
எந்த அளவுக்கு என்றால், உலக பொருளாதாரமே சுமார் 1.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி சரியலாம் என பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியே வர, இந்தியா, என்ன செய்யலாம் என முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் போன்ற அனுபவஸ்தர்கள் தங்கள் அட்வைஸைச் சொல்லி இருக்கிறார்கள்.
ஹெல்த் எமர்ஜென்சி
முதலில் இந்த கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு (Stimulus Package) செய்ய வேண்டும். இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை யாரும் உயிரிழக்க வில்லை என்றாலும், சுமார் 130 கோடி பேர் வாழும் இந்தியா எந்த மோசமான சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன்.
நிதி கண்டிஜென்சி திட்டம்
இந்தியாவின் சமீபத்தைய பட்ஜெட்டில் கூட நிதி சார்ந்த விஷயங்களில் பழமைவாதத்தோடு தான் இருக்கிறது. ஒருவேளை, இந்த கொரோனா வைரஸ், உலக பொருளாதாரத்தை, ரெசசனை நோக்கி நகர்த்தினால், அப்போதும் மத்திய அரசு, வெறுமனே தங்கள் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஃபிஸ்கல் திட்டம்
இந்திய பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் விதத்தில், ஒரு நல்ல ஃபிஸ்கல் திட்டத்தை தயார் செய்து வைக்க வேண்டும். ஃபிஸ்கல் பாலிசி என்றால் என்ன..? இந்தியப் பொருளாதாரத்தில் விதிக்கப்பட்டும் வரிகள் மற்றும் மத்திய அரசு செய்ய இருக்கும் செலவீனங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் அரசு திட்டம் தான் இந்த Fiscal Policy. வரியை கூடுதலாக வசூலிப்பதா வேண்டாமா..? வரியைக் குறைப்பது என்றால் எதில் குறைப்பது, யாருக்கு குறைப்பது, எங்கு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என திட்டமிட்டு எடுக்கப்படும் முடிவுகளை எல்லாம் Fiscal Policy என்று சொல்லலாம்.
உள்நாட்டுத் தேவை
உலக பொருளாதாரத்தில், நீண்ட காலத்துக்கு தேவை (டிமாண்ட்) குறைவாகவே இருக்கும் இந்த நேரத்தில், உள் நாட்டுத் தேவையை (டிமாண்டை) அதிகரிக்க, அரசு தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் பொருளாதார வல்லுநர் ஜஹான்ங்கீர் ஆசிஸ்.
உற்பத்தி யோசனை
இந்தியாவின் டாப் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருட்களை தயாரிப்பதற்கு பதிலாக, எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதத்தில், குறைந்த விலையில் பொருட்களைத் தயாரித்தால் வளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார் பொருளாதார வல்லுநர் ரத்தின் ராய்.
நிதிக் கொள்கை
சமீபத்தில் தான் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்தது. ஏன் என்று கேட்டதற்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கட்டும் எனச் சொன்னது. அதே போல் நம் மத்திய ரிசர்வ் வங்கியும், இந்தியாவில் பொருளாதாரத்தை பாதுகாப்பதோடு, தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் பயன்படுத்தி நிதி ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.