உலகம் முழுக்கவே, கொரோனா வைரஸ் பிரச்சனையால், பொருளாதாரம் பலமாக அடி வாங்கி இருக்கிறது.
பல தசாப்தங்களாக வளர்ச்சி கண்டு வந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் இப்போது கொரோனாவால் காணாமல் போய்விட்டது.
இந்த சூழலில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றால், உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதற்கு உற்பத்தித் துறையையும் மேம்படுத்த வேண்டும். உற்பத்தித் துறையை மேம்படுத்த முதலீடுகள் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், கம்பெனிகள் முதலீடு செய்ய விரும்பும் முதல் நாடாக இந்தியா இல்லை.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சர்வே
முதலீடுகளை ஈர்ப்பதில், வியட்நாம் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்தைய ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் சர்வே. விய்நட்நாமைத் தொடர்ந்து, கம்போடியா, மியான்மர், பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகள் இருப்பதாகச் சொல்கிறது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்.. இந்த பட்டியலில் இந்தியாவையும் கொண்டு வர, மத்திய அரசு ஒரு சூப்பர் யோசனையை கையில் எடுத்து இருக்கிறது.
மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், கம்பெனிகளை ஈர்க்கவும், மத்திய அரசு, 1.68 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத் தொகைகளாகக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவும் கம்பெனிகளுக்கு இந்த ஊக்கத் தொகையைக் கொடுக்கப் போகிறார்களாம்.
எந்த எந்த துறைகள்
இந்த உற்பத்தி ஊக்கத் தொகை, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், சோலார் பேனல் உற்பத்தியாளர்கள், கன்ஸ்யூமர் அப்ளையன்சஸ்களுக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு ஸ்டீல் உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்கு கொடுக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. டெக்ஸ்டைல், உணவுப் பதப்படுத்தும் ஆலைகள், சிறப்பு பார்மா பொருட்கள் போன்ற துறைகளுக்கும் கொடுப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
பொருளாதார வளர்ச்சி
கடந்த ஜூன் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவுக்கு 23.9 % சரிந்து இருக்கிறது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து, இந்தியாவை மீட்டு எடுக்க, முதலீடுகள் தேவையாக இருக்கின்றன. எனவே தான் முதலீடுகளை ஈர்க்க, மத்திய அரசு தொடர்ந்து வேலை பார்த்து வருகிறது.
பாராட்டும் பொருளாதார நிபுணர்
மத்தியா அரசின் இந்த திட்டம், இந்திய உற்பத்தித் துறையில், குறிப்பாக வளர்ந்து வரும் சோலார் & எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் கண்டிப்பாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். முதலீடுகளை ஈர்க்க இது ஒரு நல்ல வழி எனச் சொல்லி இருக்கிறார் கேர் ரேட்டிங்ஸ் கம்பெனியின் முதன்மைப் பொருளாதார நிபுணர் மதன் சப்நாவிஸ் (Madan Sabnavis).