இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல முக்கியத் திட்டங்களைத் தீட்டியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை அரசு நிறுவனப் பங்கு விற்பனை மூலம் திரட்ட ஆலோசனை செய்து வருகிறது.
தற்போது நடத்தப்பட்டு வரும் ஆலோசனையில் நிலக்கரி மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து இந்த நிதியைத் திரட்ட திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதியை அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கி வருகிறது.
கோல் இந்தியா
உலகின் மிகப்பெரிய நிலக்கரி நிறுவனமாக விளங்கும் கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் தற்போது ஆலோசனை செய்து வருகிறது. மேலும் எவ்வளவு பங்குகள் விற்கப்படும், எப்போது பங்குகள் விற்பனை செய்யப்படும் என்பது குறித்துத் தகவல் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், சந்தை நிலவரத்தைப் பொருத்து தான் அரசு பங்குகளை விற்பனை செய்யும்.
சந்தையில் சரியான விலை கிடைக்காத பட்சத்தில் அரசிடம் இருக்கும் பங்குகளைக் கோல் இந்தியா நிர்வாகமே வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்த முடிவு இறுதி என்பதை நிதியமைச்சகம் தான் முடிவு செய்யும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இதேபோல் அரசு கையில் அதிகளவிலான பங்குகள் இருக்கும் வங்கியின் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
2.1 லட்சம் கோடி ரூபாய்
பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் நாட்டின் 3.5 சதவீத நிதி நெருக்கடியைச் சமாளிக்கப் பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டார்.
ஆனால் கொரோனா பாதிப்புத் தற்போது அதிகளவிலான நிதியைச் சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டி கட்டாயத்தில் தள்ளியுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தேவைப்படும் நிதியைத் திரட்ட மாற்று வழிகளைத் தேட வேண்டி சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது.
தோல்வி
கொரோனா பாதிப்பால் வெளிநாட்டு விமானப் பயணத்தின் உலகளாவிய தடை மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் எதிரொலியாக மத்திய அரசின் ஏர் இந்தியா மற்றும் பார்த் பெட்ரோலியம் நிறுவனங்களின் பங்கு விற்பனை தோல்வி அடைந்தது.
மத்திய அரசு
கடந்த வருடம் மத்திய அரசு ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை லைப் இன்சூரன்ஸ் கார்ப் வாங்கி விட்ட நிலையில் இவ்வங்கியில் அரசு பங்கு இருப்பின் அளவு 47 சதவீதமாகக் குறைந்தது.
இதேபோல் கோல் இந்தியா நிறுவனத்தில் 66 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அரசு வைத்திருந்த நிலையில், அதில் 10 சதவீத பங்குகளை மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 2015இல் விற்பனை செய்தது.
இந்தப் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 225.5 பில்லியன் ரூபாயை ஈட்டியது.
1994ஆம் ஆண்டு
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வுகள் படி இந்தியப் பொருளாதாரத்தின் நிதி நெருக்கடி வரும் ஆண்டுகளில் ஜிடிபியில் 7 சதவீதமாக உயரும் என்றும் இது 1994ஆம் ஆண்டின் நிலை என்றும் கணித்துள்ளது.