கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் விண்ட்பால் வரியினை (windfall tax) குறைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் சமீபத்திய வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் தான் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களுக்கு விதிக்கப்படும் இந்த விண்ட்பால் வரியினை அரசு குறைத்துள்ளது.
எவ்வளவு வரி குறைப்பு?
இந்த விண்ட்பால் வரியினை டன்னுக்கு 4900 ரூபாயில் இருந்து, 1700 ரூபாயாக அரசு குறைத்துள்ளது. இது மேற்கொண்டு எரிபொருள் ஏற்றுமதியினை அதிகரிக்க உதவும்.
விமானத்திற்கு பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளுக்கான வரியினை லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 1.5 ரூபாயாக குறைத்துள்ளது. இது மேற்கொண்டு எரிபொருள் விலை குறைய காரணமாக அமையலாம். இது விமான நிறுவனங்கள் அதன் கட்டணத்தினை குறைக்க வழி வகுக்கலாம்.
யாருக்கு பலன்?
அதோடு மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் ஏற்றுமதியாளார்கள் பெரும் பலனை அடையலாம்.
இந்த விண்ட்பால் வரியினை அரசு எதிர்பாராத வகையில் கிடைக்கும் பெரிய அளவிலான லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
இது தான் காரணம்?
நாட்டில் எரிபொருள் விலை மேற்கொண்டு அதிகரிக்காமல் இருக்க பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அரசு, அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கையினை எடுப்பது வழக்கான ஒன்று. வரியை அதிகரித்தால், எண்ணெய் உற்பத்தியாளர்கள் உள்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இங்கு தட்டுபாடு ஏற்படாது என்று நினைக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் தான், இந்த வரி விகிதத்தினை குறைத்துள்ளது.
ஒரே மாதத்தில் இரு முறை
இந்த வரி குறைப்பு நடவடிக்கையானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று மத்திய அரசு, டன்னுக்க்கு 10,200 ரூபாயில் இருந்து, 4900 ரூபாயாக இந்த வரியினை குறைத்தது நினைவுகூறத்தக்கது.
நுகர்வு குறையலாம்
சீனாவில் பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது குறைந்து வருகின்றது. இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான சீனாவில் தேவையானது குறையலாம் என்ற பதற்றமும் நுகர்வோர் மத்தியில் இருந்து வருகின்றது.
முந்தைய நிலவரம்
கடந்த ஜூலை 1ம் தேதியன்று இந்த விண்ட்பால் வரியானது அதிகரிக்கப்பட்டது. இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு எண்ணெய் விலையானது வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. இதன் காராணமாக ஏற்றுமதி வரியாக பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் விதிக்கப்பட்டது. இதே விண்ட்பால் வரியாக டன்னுக்கு 23, 250 ரூபாயும் விதிக்கப்பட்டது.
நிறுவனங்களுக்கும் பலன்
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஓ என் ஜி சி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்னை பெட்ரோலியம் கார்ப், மங்களூரு ரீபைனரி உள்ளிட்ட பல உற்பத்தியாளர்களும் பலன் பெறலாம்.
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
இதற்கிடையில் மக்களிடையே மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள பெட்ரோல், டீசல் விலை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. விண்ட்பால் வரியினை குறைத்த அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியினையும் குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.