வோடபோன் மற்றும் கெய்ர்ன் உள்ளிட்ட 15 நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் வகையில், நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் சர்ச்சைக்குரிய 2012 சட்டத்தினை நீக்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு வரியை ரத்து செய்யும் ஒரு புதிய மசோதா, கெய்ர்ன், வோடபோன் மற்றும் பிற நிறுவனங்கள் வட்டி இல்லாமல், அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய அனைத்தையும் திரும்பப் பெறலாம் என கூறுகிறது.
இதன் மூலம் வோடபோன் ஐடியா, கெய்ர்ன் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் பெரியளவில் பயன் பெறலாம்.
வோடபோன் சரிவு
அரசின் இந்த அறிவிப்பானது, பில்லியனரான குமார் மங்கலம் பிர்லா தனது 27% பங்குகளை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, அவர் வோடபோன் குழுமத்தில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அதன் பங்கு விலையும் மிக மோசமான சரிவினைக் கண்டது. இதனால் அதன் சந்தை மதிப்பும் மிக சந்தை மூலதனமும் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவுக்கு தோல்வி
கெய்ர்ன் மற்றும் வோடஃபோன் ஆகியவை சர்வதேச நீதிமன்றங்களில் பின்னோக்கு வரிக்கு எதிராக வழக்குத் தொடுத்தன. இந்த இரண்டிலுமே இந்தியா தோல்வியையே சந்தித்தது.
இந்த இரண்டு வழக்கின் தீர்ப்புகளிலும், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம், கூறப்படும் வரி பொறுப்பு அல்லது வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றை மீட்க இந்தியா இனி எந்த முயற்சியும் (the alleged tax liability or any interest and or penalties) செய்யக்கூடாது என்று தீர்ப்பளித்தது.
ஹட்ச் – வோடபோன்
இந்த வழக்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தான் கடந்த ஆண்டு செப்டம்பரில், வோடபோனுக்கு எதிரான வழக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. கடந்த 2007ம் ஆண்டில் ஹட்சீசன் வம்போவாவிடம் 67% பங்குகளை, வோடபோன் நிறுவனம் 11 பில்லியன் டாலர் பங்கினை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகத் தான் வரி கோரிக்கையை அரசாங்கம் 11,000 கோடி ரூபாய் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பாயம் என்ன தீர்ப்பு?
இது குறித்த வழக்கில், வோடஃபோன் மீது வரி பொறுப்பு மற்றும் வட்டி மற்றும் அபராதம் விதிப்பது, இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையே முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. மேலும் வோடபோனுக்கு சட்ட செலவுகளுக்கு பகுதி இழப்பீடாக அரசு 40 கோடி ரூபாயினை செலுத்தவும் தீர்ப்பாயம் அப்போது உத்தரவிட்டது.
விதிகளில் மாற்றம்
வோடபோன் நிறுவனத்திற்கு கடந்த 2012ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்தது, ஆனால் அந்த ஆண்டின் பிற்பாதியில் அரசாங்கம் ஏற்கனவே முடிக்கப்பட்ட வரி ஒப்பந்தங்களுக்கு விதிகளை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் வாதம் இது தான்
அரசு கோரும் 11,000 கோடி ரூபாய் வரியானது இந்திய நிறுவனமான Hutchison Whampoaவிடம் இருந்து, கடந்த 2007ல் கையகப்படுத்தியதில் இருந்து உருவாகியது என்றும் கூறப்படுகிறது. அரசு தரப்பில் இந்த நிறுவனத்தினை கையகப்படுத்திய வோடபோன் தான் இதனை செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
கெய்ர்ன் எனர்ஜி
இதே போல பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கெய்ர்னுக்கு எதிரான மோதலில், சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்தியா இரண்டாவது முறையாக தோல்வியையே சந்தித்தது. ஏனெனில் கெய்ர்ன் எனர்ஜி மீதான இந்திய அரசின் வரி விதிப்பானது செல்லுபடியாகாது என்று தீர்ப்பு வெளியானது.
என்ன தீர்ப்பு
மேலும் கெய்ர்ன் எனர்ஜிக்குச் சொந்தமான பங்குகளை விற்ற தொகை, அதற்கு சொந்தமான பங்குகளின் லாப ஈவுத்தொகை, கெய்ர்ன் எனர்ஜிக்கு தரப்பட வேண்டிய 1,590 கோடி ரூபாய் வரி மற்றும் நீதிமன்ற செலவுகள் மற்றும் அபராதம் சேர்த்து மொத்தம் சுமார் 9000 கோடி ரூபாயினை வட்டியோடு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
எதற்காக மூலதன ஆதாய வரி?
இந்தியாவில் ஒரு சொத்து விற்கப்படும்போது கிடைக்கும் ஆதாயத்திற்கு, லாபமாக கருதப்பட்டு மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதனை தவிர்க்க, வெளி நாட்டில் தங்களது கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்கின்றன. இதனால் இந்தியாவில் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கின்றன. இது குறித்த தெளிவுக்காகத் தான் 2012ம் ஆண்டில் இந்திய அரசு வருமான வரி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.
இந்தியாவுக்கு வரி கட்டணும்
இதன் படி இந்தியாவில் செயல்படும் மற்றும் சொத்துகளை கொண்டுள்ள நிறுவனங்கள் கைமாறுவது தொடர்பான மூலதன பங்குகளின் விற்றல் அல்லது வாங்கல் வெளி நாட்டு நிறுவனங்கள் மூலமாக நடந்திருந்தாலும், அதற்காக மூலதன ஆதாய வரியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
கெய்ர்ன் எனர்ஜியின் சொத்து
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனமும் இந்தியாவில் ராஜஸ்தான் எண்ணெய் வயல் உள்ளிட்ட சொத்துகளை வைத்திருந்தது. அவற்றை கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் என்ற பெயரில் வைத்திருந்தது. ஆனால் கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டது. இது கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். இதே கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ், கெயின் எனர்ஜிக்கு சொந்தமான நிறுவனமாகும்.
கெய்ர்ன் இந்தியா பங்கு
தனது பங்குகளை பங்கு சந்தையில் விற்க தயாரான கெய்ர்ன் யுகே நிறுவனம், கெய்ர்ன் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கெய்ர்ன் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மாற்றியது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள சொத்துகள் இந்த புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இதற்கு பதிலாக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் 69% பங்குகள், கெய்ர்ன் யுகே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.