அபிஷேக் ஜெயின் என்பவர் சுமார் 14 வருடத்திற்கு முன்பு அமெரிக்காவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் வந்துள்ளார், முதல் நாள் முதல் கடுமையான உழைப்பைத் தனது பணியில் காட்டிய நிலையில் அதிகப்படியான சம்பள உயர்வு, பதவி உயர்வு எனக் கரியரில் வேகமாக வளர்ந்துள்ளார்.
இதேவேளையில் அபிஷேக் ஜெயின் திருமணம் செய்துகொண்டு கார் கராஜ் உடன் கூடிய 4 பெட்ரூம் கொண்ட ஒரு பெரிய வீட்டை வாங்கிச் செட்டிலாகியுள்ளார்.
இது தான் பெரும்பாலான இந்தியர்களின் அமெரிக்கக் கனவு. இந்த நிலையில் தான் அபிஷேக் ஜெயின் சற்றும் எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் நடந்தது.
ஐடி ஊழியர்கள்
இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 90 சதவீதம் பேருக்கு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்பது பெரும் கனவாக இருப்பது இயல்பான ஒன்று. ஆனால் சமீபத்திய பணிநீக்கம் பலரையும் பயமுறுத்தியது என்றால் மிகையில்லை.
அமெரிக்கக் கனவு
ஒரு சராசரி இந்திய ஐடி ஊழியரின் அமெரிக்கக் கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் தான் 43 வயதாகும் அபிஷேக் ஜெயின், இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வாஷிங்டன் அருகில் இருக்கும் Bellevue பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அமெரிக்க டெக் துறை
இந்த நிலையில் அக்டோபர் மாத அமெரிக்க டெக் துறையில் அறிவிக்கப்பட்ட அதிகப்படியான பணிநீக்க அறிவிப்பில் அபிஷேக் ஜெயின்-ம் பாதிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான உடனே அபிஷேக் ஜெயின் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது மட்டும் அல்லாமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் முடங்கியுள்ளது.
கிரீன் கார்டு
அபிஷேக் ஜெயின் 14 வருடமாக அமெரிக்காவில் இருக்கும் நிலையில், 12 வருட போராட்டத்திற்குப் பின்பு அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை அதாவது கிரீன் கார்டு வாங்கியுள்ளார். இந்த நிலையில் மற்றவர்கள் போல் வேலை போனால் என்ன இந்தியாவில் வேறு வேலையைத் தேடிக்கொள்ளலாம் எனச் செல்ல முடியாத நிலையில் அபிஷேக் ஜெயின் உள்ளார்.
ஹெச்1பி விசா
ஹெச்1பி விசா வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் 60 நாட்களுக்குள் புதிய வேலையைத் தேடிப்பிடிக்க வேண்டும், அதிலும் குறிப்பாக விசா காலம் முடியும் தருவாயில் இருப்பவர்கள் வேலை உடன் விசா ஸ்பான்சர்ஷிப்-ஐயும் தேட வேண்டும்.
60 நாள் கெடு
இது மட்டும் அல்லாமல் 60 நாட்களுக்குள் வேறு வேலைவாய்ப்பைத் தேடிக்கொள்ள முடியாத பட்சத்தில் அந்நாட்டு அரசு அவர்களைத் தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடும். இதோடு பல ஆண்டுக் காலம் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் பணியாற்றிய ஊழியர்கள் அந்த நாட்டிலேயே செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளனர்.
பல வருட காத்திருப்பு
தற்போது 60 நாள் காலக் கெடு முடிந்துவிட்டால் இந்தியாவிற்கு வந்து, திரும்பவும் ஹெச்1பி விசா பெற்று அமெரிக்கா செல்ல வேண்டும் இதனால் கிரீன் கார்டு சீனியாரிட்டி இழக்க வேண்டும் பல வருட காத்திருப்பு வீண் ஆகும் நிலை பலருக்கு உருவாகியுள்ளது.
146000 டெக் ஊழியர்கள்
Layoffs.fyi நிறுவனத்தின் கணக்கின் படி இந்த ஆண்டுச் சுமார் 146000 டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், இதில் நவம்பர் மாதம் மட்டும் 51000 பேர் எனக் கூறுகிறது. இதில் குறைந்தது 10 சதவீதம் பேர் ஹெச்1பி விசாவில் இருக்கும் வெளிநாட்டவர்களாக இருக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
EB-5 விசா
இந்தியர்களும் பிற வெளிநாட்டு ஹெச்1பி விசா ஊழியர்கள் மத்தியில் குறிப்பாக மெட்டா, டிவிட்டர், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் EB-5 முதலீட்டு விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.