இந்தியாவில் தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும், கிரிப்டோகரன்சியை வைத்துள்ளவர்கள் மீது அதீத அபராதம் விதிக்கவும் புதிய டிஜிட்டல் கரன்சி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையிலும் இந்திய முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சி மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக வர்த்தகத் தளமாக விளங்கும் WazirX தளத்தில் பிப்ரவரி மாதத்தில் வெறும் 11 நாட்களில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தக உயர்வை அடைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 25 முதல் 30 நாட்களில் 1 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தக அளவீட்டை அடைந்த நிலையில் தற்போது வெறும் 11 நாட்களில் அடைந்துள்ளது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பிட்காயின் மீது 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்து பின்பு பிட்காயின் மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு, தொடர்ந்து வர்த்தக உயர்வை அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பல ஆயிரம் பேர் புதிதாகக் கிரிப்டோ வர்த்தகச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
டெஸ்லாவின் முதலீடு மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகளையும் தாண்டி இந்திய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 3.68 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பிட்காயின் 49.192.45 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் எதிரம் 2.57 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,802.47 டாலருக்கும், பிட்காயின் கேஷ் 4.03 சதவீதம் உயர்ந்து 719.83 டாலருக்கும், லைட்காயின் 6.66 சதவீதம் உயர்ந்து 215.73 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.