டெல்லி: அமெரிக்காவின் அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின், இது எங்கள் நாடு, இது எங்கள் வேலை என்கிற முழக்கம் அமெரிக்காவிலேயே ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வேலைக்கு எடுக்கப்படும் மற்ற நாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியது அமெரிக்கா.
விளைவு வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் வேலை செய்ய அதிகம் பயன்படுத்தும் H-1B Visa பெரிய அளவில் குறையத் தொடங்கியது. உண்மையில் குறைக்கத் தொடங்கினார்கள்.
கெடுபிடி
அமெரிக்க குடியுரிமை விதிகள் குறிப்பாக, H-1B Visa-க்களுக்கு கடுமையாக்கப்பட்டது. H-1B Visa விண்ணப்பிப்பதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. அவ்வளவு ஏன் H-1B Visa வாங்கி ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கும் போதுமான நீட்டிப்புகளை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒரு படி மேலே போய் H-1B Visa மறுப்பதையே ஒரு பெரிய வேலையாக மாற்றி இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.
குறிப்பாக இந்தியாவுக்கு
கடந்த 2018-ல் வெளியான ஒரு செய்தியில், அமெரிக்கா கொடுக்கும் மொத்த H-1B Visa-க்களில் சுமார் 75 சதவிகித விசாக்கள் இந்தியர்களுக்குத் தான் போய் சேர்வதாகச் சொல்கிறது. ஆக இந்த புதிய கடுமையான விசா சட்ட திருத்தங்களால் அதிகம் பாதிக்கப்படப் போவதும், பாதிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதும் நம் இந்தியர்கள் தான் என்பதை இங்கு தெளிவாகப் பார்க்க முடிகிறது.
விசா மறுப்பு
சரி நிறுவனங்களின் விசா மறுப்புக்கு வருவோம். இந்தியாவின்
விப்ரோ - 53 %
இன்ஃபோசிஸ் - 45 %
டெக் மஹிந்திராவுக்கு - 41 %
டி சி எஸ் - 34 % என ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சுமார் பாதிக்கு பாதி விண்ணப்பங்களை மறுத்து இருக்கிறார்கள். புரியவில்லையா..?
இப்போது உதாரணமாக விப்ரோவை எடுத்துக் கொள்வோம். விப்ரோ 100 பேருக்கு விசா கேட்டு விண்ணப்பித்து இருக்கிறது என்றால் அதில் 53 பேருக்கு, அமெரிக்க குடியுரிமை அலுவலகம் விசாவை மறுத்து இருக்கிறது. இதை National Foundation for American Policy என்கிற அமைப்பே உறுதிபடுத்தி இருக்கிறது.
நிதி ஆண்டு
அமெரிக்காவில் அக்டோபர் தொடங்கி செப்டம்பர் வரை தான் ஒரு நிதி ஆண்டு என்பார்கள். அப்படிப் பார்த்தால் கடந்த அக்டோபர் முதல் ஜூன் வரையான 9 மாதங்களில் தான் மேலே சொன்ன படி ஒவ்வொரு நிறுவனங்களுக்கும், விசாவை நிராகரித்து இருக்கிறார்கள். இதுவே கடந்த 2014 - 15 அமெரிக்க நிதி ஆண்டில், இதே இந்திய ஐடி நிறுவனங்களின் விசா விண்ணப்பங்களில் 2 - 7 சதவிகித விண்ணப்பங்களை தான் நிராகரிக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
நீட்டிப்புகளும் மறுப்பு
சரி புதிதாக விசா கொடுப்பதில் தான் சிக்கல்கள், மற்ற படி எல்லாமே ஓகே வா..? என்று பார்த்தால் அது தான் இல்லை. ஏற்கனவே H-1B Visa வாங்கி அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் 3 ஆண்டுகள் கழித்து, மீண்டும் நீட்டிப்பு கேட்டு வாங்க வேண்டும். அப்படி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிலும் ஒரு கணிசமான ஊழியர்களுக்கு நீட்டிப்பு கொடுக்கவில்லையாம்.
எந்த நிறுவனத்துக்கு எவ்வளவு
நிறுவனவாரியாக விவரங்கள் இதோ
இன்ஃபோசிஸ் - 29 %
டிசிஎஸ் - 22 %
விப்ரோ - 19 %. உதாரணமாக இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் 100 பேர் நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்தால், அதில் 29 சதவிகிதத்தினருக்கு நீட்டிப்பே கொடுக்காமல் சொந்த நாடுகளுக்குத் திரும்பச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது விசா நீட்டிப்பு கேட்டு விண்ணப்பிக்கும் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களில் சுமார் 20 - 30 சதவிகிதம் பேருக்கு நீட்டிப்பு வழங்கப்படுவது இல்லை.
மற்ற நாட்டு நிறுவனங்களுக்கு
அமேசான், மைக்ரோசாஃப்ட், இண்டெல், கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற அமெரிக்க ஐடி நிறுவனங்கள் விண்ணப்பித்த விசாக்களில் 2 - 8 சதவிகித விண்ணப்பங்கள் தான் மறுக்கப்பட்டு இருக்கிறதாம். குறிப்பாக ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்த விசாக்களுக்கு தான் மிகக் குறைந்த நிராகரிப்புகள் இருந்ததாகவும் சொல்கிறது அந்த அமைப்பு. ஆக இந்த நிராகரிப்புகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமே ஓர வஞ்சனை செய்வதாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
பார்ப்போம்
இப்படி தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கான விசாக்களை மறுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தான் உலகமயம், தாராளமயம் மற்றும் தனியார்மயத்தை தூக்கிப் பிடித்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் வேடிக்கையான உண்மை. இதற்கு மேலும் நம் இந்தியர்களுக்கு விசா விஷயத்தில் என்ன மாதிரியான கொடுமைகள் எல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. பார்ப்போம், காலம் நமக்கு சாதகமாக மாறும் என நம்புவோம். உலகம் ஒரு குடும்பமாக மாறட்டும்..!