இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக உலக நாடுகளின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றி வருகிறது.
கொரோனா தொற்றுக்குப் பின்பு புதிய தொழில்நுட்ப துறையில் அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிக வர்த்தகத்தைக் கைப்பற்றி வருகிறது.
இதன் வாயிலாகவே நாட்டின் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் வருவாய் அளவீட்டுக் கணிப்பை அதிகரித்து ஒவ்வொரு காலாண்டிலும் 2 இலக்க வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
கொரோனா காலம்
கொரோனா காலத்தில் உலக நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை டிஜிட்டல் டிரான்பார்மேஷன் செய்யத் திட்டமிட்ட காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 25 சதவீதம் என்ற 7 வருட உயர்வை தொட்டு உள்ளது என நாஸ்காம் தெரிவித்துள்ளது
பிரம்மாண்ட வளர்ச்சி
ஆனால் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சியில் சில முக்கியப் பிரச்சனைகளையும் இந்திய ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் காரணத்தால் வளர்ச்சி அளவீடுகள் அடுத்தச் சில காலாண்டுகளில் அதிகளவில் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்திய ஐடி துறையில் அப்படி என்ன பிரச்சனை உள்ளது.
4 முக்கியப் பிரச்சனைகள்
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது 4 முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. 1. அதிகரித்து வரும் ஐடி சேவை டிமாண்ட் 2. திறமையான ஊழியர்களுக்கான அதீத தட்டுப்பாடு 3. பெரிய திட்டங்கள் எண்ணிக்கை குறைவு 4. வெளிநாடுகளுக்கும் செல்ல அனுமதி மற்றும் Work From Home நிறுத்தம்
இந்திய ஐடி துறை ஆதிக்கம்
சர்வதேச ஐடி சேவை துறையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது அதிகளவிலான திட்டத்தைப் பெற மிக முக்கியமான காரணம் ஆன்சைட் மற்றும் ஆப்சைட் வர்த்தகத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் விரிவாக்கம் செய்துள்ளது. இதோடு பிற நாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான விலை, அதிகப்படியான படிப்பினை மற்றும் தொடர்ந்து திட்ட வளர்ச்சி ஆகியவை பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன்
இதன் காரணமாகக் கொரோனா தொற்று காலத்திலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்தையும், புதிய தொழில்நுட்ப திட்டத்தையும் அதிகளவில் பெற்றுள்ளது. குறிப்பாக இன்போசிஸ், டிசிஎள் கிளவுட், டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் துறையில் அதிக வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
வருவாய் பங்கீட்டில் இந்தியா மாஸ்
உலகளாவிய ஐடி சேவை துறையில் இந்திய ஐடி சேவை துறையின் revenue market share (RMS) அளவீடு 2011 முதல் 2021ல் 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் அக்சென்சர், ஐபிஎம், DXC, அடோஸ், கேப்ஜெமினி, காக்னிசென்ட் ஆகிய சர்வதேச நிறுவனங்களின் சந்தை 86 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஊழியர்களுக்கு அதீத தட்டுப்பாடு
உலகம் முழுவதும் ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள வேளையில் இந்தத் திட்டத்தை உரிய காலத்திலும், உரிய நேரத்திலும் செய்து முடிக்கப் போதுமான திறன் வாய்ந்த ஊழியர்கள் இந்திய சந்தையில் இல்லை என்பதால் ஐடி நிறுவனங்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்ல முடியாமல் உள்ளது.
சம்பள உயர்வு
சக போட்டி நிறுவனங்களில் இருந்து திறன் வாய்ந்த ஊழியர்களைக் கைப்பற்றினாலும் அதிகச் சம்பள கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. தற்போது சந்தையில் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கொடுக்கப்படும் நிலவரம் உள்ளது.
மெகா டீல்
மேலும் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் திட்டங்களைப் பெறும் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அதாவது பல பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைப் பெறும் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
3 வருடம் மட்டுமே
இதேபோல் இந்திய ஐடி நிறுவனங்கள் பெறும் திட்டத்திற்கான காலம் சராசரியாக 3.5 வருடமாக இருந்த நிலையில் தற்போது 3 வருடங்களாகக் குறைந்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் டாப் 4 ஐடி நிறுவனங்கள் கடந்த சில காலாண்டுகளில் கைப்பற்றிய பெரிய டீல்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகக் கடந்த 3 வருடத்தில் வெளிநாட்டில் தனது அலுவலகம், ஊழியர்கள், கட்டமைப்பு என அனைத்தையும் விரிவாக்கம் செய்தது.
வெளிநாட்டுப் பயணம்
கடந்த 2 வருடம் கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஊழியர்கள் செல்லாமல் இருந்த காரணத்தால் எவ்விதமான சுமையும் இல்லை, ஆனால் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு அதிகச் செலவு ஏற்படும்.
Work From Home
இதேபோல் Work From Home தற்போது அனைத்து நிறுவனங்களிடம் குறைக்கப்பட்டு ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு உள்ள காரணத்தால் இந்திய சந்தையிலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
லாப அளவீடுகள்
இதனால் அடுத்த காலாண்டு முதல் இந்திய ஐடி நிறுவனங்களின் லாப அளவீடுகள் அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது. வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்தாலும், செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும் பெரும் பிரச்சனையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சிக்கியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு
இதேவேளையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய் அளவில் இருக்கும் காரணத்தால் அதிக வருமானம் கிடைத்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு 40 -45 ரூபாய்க்கு உயர்ந்தால் ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் பிரச்சனை ஏற்படும்.
லாபம் குறைந்தால் ஐடி ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பள உயர்வு குறைக்கப்படும், அதிகச் சம்பளம் வாங்குவோரை பணிநீக்கம் செய்யப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.