கொரோனா வைரஸ் நோய் பரவலில் இருந்து, இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நரேந்திர மோடி, மற்றும் ஒரு அதிரடி முடிவை எடுத்து இருக்கிறார்.
அடுத்த 21 நாட்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் லாக் டவுன் செய்ய இருக்கிறார்களாம். இந்த லாக் டவுன் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது எனச் சொல்லி இருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சுய ஊரடங்கு தான் ஒரே வழி. எனவே தான் 21 நாட்களுக்கு இந்த லாக் டவுனை அறிவித்து இருக்கிறார்களாம்.
வல்லரசு நாடுகள்
இந்தியாவை விட நல்ல பொருளாதார பலம் வாய்ந்த நாடுகள் கூட, கொரோனா வைரஸை சமாளிக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னமும் கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவிக் கொண்டு தான் இருக்கிறது. பல வல்லரசு நாடுகளே செய்வதறியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பெரிய விலை
சுய ஊரடங்கு (Social Distancing) கடை பிடிக்கவில்லை என்றால், இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். அதோடு இந்த லாக் டவுனால், இந்தியா பொருளாத விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் நம் மக்களின் பாதுகாப்பு முக்கியம் எனச் சொல்லி இருக்கிறார் மோடி.
மறந்துடுங்க
அடுத்த 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வருவதை மறந்துவிடுங்கள் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இது கிட்டத்தட்ட ஊரடங்கு போலத் தான். ஆனால் சமீபத்தில் நடந்த janta curfew-வை விட இது கடுமையானது எனவும் அடிக் கோடு போட்டுச் சொல்லி இருக்கிறார்.
விளைவுகள்
சரி, இந்த 21 நாள் லாக் டவுனால், பொருளாதார விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்களே, அப்படி என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கும்..? என்பதைத் தான் இங்கு விரிவாகப் பார்க்க இருக்கிறோம். முதலில் நம் சம்பளத்தில் இருந்து தொடங்குவோம்.
சம்பளம்
ஒருவர், ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார் என்றால் அவருக்கு மாதா மாதம் சம்பளம் வரும். இப்போது தொடர்ந்து ஒரு மாத காலம் எந்த வேலையும் பார்க்காமல் சம்பளம் கொடு என்றால் கம்பெனி கொடுக்குமா..? கம்பெனி கொடுக்க தயாராக இருந்தால் கூட, கம்பெனிக்கு வியாபாரம் ஆகி வருமானம் வந்தால் தானே ஏதாவது சம்பளம் கொடுக்க முடியும்..?
உற்பத்தித் தொழில்
சுரங்கத் துறை, கச்சா எண்ணெய், கேஸ், உற்பத்தி ஆலைகளைச் சார்ந்து வேலை இருக்கும் டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், உணவகங்கள் போன்ற துறைகளில், மக்கள் ஒன்று கூடக் கூடாது எனச் சொல்லி இருப்பதால், வேலைகள் வழக்கம் போலச் செய்ய முடியவில்லை. எனவே பொருளே போதுமான அலவு உற்பத்தி ஆகவில்லை என்றால் பிறகு எங்கிருந்து விற்பது, வருமானம் பார்ப்பது.
வியாபாரம் காலி
பொருளை உற்பத்தி செய்வதை ஒரு பக்கம் வைத்துவிடுங்கள். ஏற்கனவே மக்கள் கொரோனா பயத்தால், அத்தியாவசியப் பொருட்களைத் தாண்டி எந்த அனாவசியப் பொருட்களையும் வாங்கவில்லை. பணத்தை தங்கம் போல செலவழிக்கிறார்கள். இதனால் ஆட்டோமொபைல், லேப் டாப், ஸ்மார்ட்ஃபோன், ஆடைகள், நகைகள், பாத்திர பண்டங்கள், துணி மணிகள், அலங்காரப் பொருட்கள், எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் என பல துறைகளின் வியாபாரம் ஏற்கனவே படு பாதாளத்தில் இருக்கிறது.
எவ்வளவு விலை
சரி தோராயமாக இதுவரை நாம் கொரோனாவுக்கு எவ்வளவு பொருளாதார விலை கொடுத்து இருப்போம் என ஏதாவது கணக்கு இருக்கிறதா..? இருக்கு. கடந்த ஜனவரி 17, 2020 அன்று மும்பை பங்குச் சந்தையில் மொத்த சந்தை மதிப்பு 160.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 23, 2020 கணக்குப் படி அதே மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 101.86 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஆக சுமார் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம்.
ஒரு குட்டிப் பகுதி
இது ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பகுதி தான். அந்த சிறிய பகுதியின் மதிப்பு இழப்பஏ 58.71 லட்சம் கோடி ரூபாய் என்றால், அமைப்பு சாராத தொழிலாளர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் கணக்கில் எத்தனை லட்சம் கோடி காலியாகும் எனப்தை நீங்களே கூட்டிக் கழித்துப் பாருங்கள்.