டெல்லி: பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 83 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இதன் நிகரலாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 82.6 சதவிகிதம் குறைந்து 564 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,247 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த லாப இழப்புக்கு முக்கிய காரணம் சரக்கு இருப்பு இழப்புகள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை - முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பேரலுக்கு 1.28 டாலர் லாபம் ஈட்டியுள்ளது. இதே ஒரு பேரலுக்கு சுத்திகரிப்பு மார்ஜின் 6.79 டாலாராகவும் இருந்துள்ளது.
இதே சரக்கு இருப்பு இழப்புகள் அல்லாமல் இதன் வருவாய் ஒரு பேரலுக்கு 3.99 டாலராக இருந்துள்ளது. மேலும் சரக்கு இருப்பு மூலம் 1,807 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ள இந்த நிறுவனம், கடந்த ஆண்டு 2,895 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இதன் மொத்த வரவுசெலவு 1.32 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை 21.4 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இதே சுத்திகரிப்பு உற்பத்தி 17.2 மில்லியன் டன்னாகவும் இருந்தது.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் லாபம் குறைந்துள்ளதாகவும், இது கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இதன் நிகரலாபம் 4,160 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 10,078 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது.
இதே செயல்பாட்டு வருவாயும் 2.82 லட்சம் கோடி ரூபாயாக நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிந்துள்ளது. இதே முந்தைய நிதியாண்டின் முதல் பாதியில் 3.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐ.ஓ.சி சுத்திகரிப்பு நிலையம் தற்போது குறைந்த சல்பர் இணக்க எரிபொருளை கப்பல்களுக்கும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இதன் முதல் சப்ளை கடந்த அக்டோபர் 26 அன்று காண்ட்லா துறைமுகத்தில் உள்ள ஒரு எல்.பி.ஜி டேங்கருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது விரைவில் மும்பை, மங்களூர், விசாகப்பட்டினம், சென்னை, கொச்சின், பாரதீப், தூத்துக்குடி, ஹால்டியாவில் உள்ள பிற இந்திய துறைமுகங்களுக்கும், அதே தரமான எரிபொருளை வழங்கும் என்றும் ஐ.ஓ.சி கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3.54 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 141 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.