கம்பியூட்டர் தொழில்நுட்ப துறையில் வியக்கவைக்கும் பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான இந்திய அமெரிக்கப் பில்லியனரான வினோத் கோசலா, இந்தியாவில் ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 10 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
இந்தியா 2வது கொரோனா அலையில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் 40க்கும் அதிகமான நாடுகள் பல வழிகளில் இந்தியாவிற்கு உதவுவது மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் இந்தியத் தொழிலதிபர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இதேபோல் ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து சோனி மற்றும் குவால்கம் நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது.
வினோத் கோசலா - கோசலா வென்சர்ஸ்
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் கோசலா வென்சர்ஸ் தலைவருமான வினோத் கோசலா தனது ட்விட்டரில் இந்தியாவில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், தாமதமாகும் நேரத்தில் பல உயிர்களை இழக்க நேரிடும்.
கிவ் இந்தியா அமைப்பு
கிவ் இந்தியா அமைப்பிற்கு இதுவரை 20000 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்ஸ், 1500 சிலிண்டர்கள்ஷ 500 ஐசியூ பெட், 100 வென்டிலேட்டர்கள், 10000 பெட் என NGO மற்றும் மருத்துவமனைகளில் இருந்து தினமும் கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.
கோசலா குடும்பம் நன்கொடை
இந்நிலையில் கோசலா குடும்பம் கிவ் இந்தியா அமைப்பிற்கு 10 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கொடுக்க உள்ளது. மேலும் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை விரைவில் அளிக்க வேண்டும் என்றும் வினோத் கோசலா தனது டிவிட்டர் கணக்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
இந்தத் தொகை மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை உடன் இயங்கும் மருத்துவமனைகளுக்குப் போதுமான ஆக்சிஜன்கள் கொண்டு சேர்க்க முடியும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 33 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சோனி குரூப் நன்கொடை
வினோத் கோசலா-வை தொடர்ந்து சோனி குரூப் கொரோனா பாதிப்பால் தடுமாறி வரும் இந்தியாவிற்குச் சுமார் 1 மில்லியன் டாலர் தொகையை UNICEF அமைப்பிற்கு அளித்துள்ளது. இதேபோல் கடந்த வாரம் ஆப்பிள், கூகுள், மாஸ்டர்கார்டு போன்ற பல நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளது.
குவால்கம் நன்கொடை
இதேபோல் இந்தியாவில் பல விதமான வர்த்தகத்தைச் செய்து வரும் குவால்கம் சுமார் 4 மில்லியன் டாலர் அளவிலான நன்கொடையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் சுமார் 40 நிறுவனங்களின் சிஇஓ-க்கள் இந்தியாவிற்குப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்து வருகின்றனர்.