இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்ரின் ஹாசன் சர்வதேச நிதி சேவை துறையில் பல முக்கியப் பணிகளில் பணியாற்றி வரும் நிலையில், நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு இவரை நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
அமெரிக்க அரசு அமைப்பில் ஜோ பிடன் ஆட்சி அமைப்பில் பல இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது பெடரல் ரிசர்வ் அமைப்பிலும் இந்தியர்களின் நியமனம் அதிகரித்து வருகிறது.
துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நவ்ரின் ஹாசன், நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் 2வது பெரும் பதவியில் இருக்கிறார். இதன் மூலம் பெடர்ல் ஓபன் மார்கெட் கமிட்டியிலும் இவருக்கு வாக்கு உரிமை உண்டு. மார்ச் 15 ஆம் தேதி தனது பணியைத் துவங்க உள்ள நிலையில் இவரது நியமனத்தை எவ்விதமான மறுப்புமின்றிப் பெரடல் வங்கிகளின் கவர்னர்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 25 வருடமாக நிதி துறையில் பணியாற்றும் நவ்ரின் ஹாசன் மூலோபாயம், டிஜிட்டல் பரிமாற்றம், இணையப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை / இடர் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் முக்கியப் பதவிகளில் இருந்தவர். இவரின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவ்ரின் ஹாசன் பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ள இவர், மார்கன் ஸ்டான்லி வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறார்.