இந்தியா வம்சாவளியினை சேர்ந்த தொழில்முனைவோர் ஒருவர் பல மில்லியன் டாலர் முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்மையில் என்ன தான் காரணம்? எதற்காக கைது செய்யப்பட்டார். மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மோசடி
50 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் நுட்ப தொழில்முனைவோரான சந்திரன், அமெரிக்காவில் முதலீட்டு திட்டம் மூலம் 10,000 பேருக்கு மேலாக மோசடி செய்து 45 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் 355 கோடி ரூபாய்க்கு மேல்) மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மோசடி செய்து பல சொகுசு கார்கள், ரியல் எஸ்டேட் என சொகுசாக வாழ்ந்தும் வந்துள்ளார்.
கைது
நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸைச் சேர்ந்த சந்திரன் (INeil Chandran), கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிக்கையின் படி, ViRSE என்ற குழுமத்தின் கீழ் சில நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்களை திட்டமிட்டு ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
அதிக லாபம் கிடைக்கும்
இந்த நிறுவனங்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையை தூண்டி முதலீட்டாளர்களை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்ததாகவும், இதற்காக ஒரு தொழி நுட்ப குழுவையே சந்திரன் வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சந்திரனின் நிறுவனங்கள்
சந்திரனின் நிறுவனங்கள் பட்டியலில் ஃப்ரீ விஐ லேப் (Free Vi Lab), ஸ்டுடியோ விஐ இங்க் (Studio Vi Inc), விஐ டெலிவரி இன்க் (ViDelivery Inc), விஐ மார்கெட் இன்க் (ViMarket Inc) மற்றும் Skalex USA Inc உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இது சொந்த கிரிப்டோகரன்சி உள்பட பல தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது.
என்ன தண்டனை?
முதலீட்டாளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பல்வேறு மோசடிகளில் சந்திரன் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு மோசடிக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், சட்ட விரோதமாக பணபரிவர்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டையும் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்படலாம்
அதோடு சந்திரனுடன் சேர்ந்து 39 டெஸ்லா வாகனங்கள் உட்பட 100 வெவ்வேறு சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் சொகுசு வாகனங்கள் என பலவும் பறிமுதல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.