இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பல தரப்பட்ட மக்கள் இருக்கும் காரணத்தாலேயே அதிகப்படியான பொருட்கள் மாறுபட்ட விலையிலும், மாறுபட்ட தரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய நுகர்வோரை நிறுவனங்கள் கவர்ந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. இது சந்தை வல்லுனர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய மக்கள்
இந்திய மக்கள் தற்போது அதிகளவில் விலை குறைவான பொருட்களையும், பிராண்டெட் இல்லாத உணவுப் பொருட்களையும் அதிகளவில் தங்களது தினசரி பயன்பாட்டுக்காக வாங்க துவங்கியுள்ளனர். இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா..?
நுகர்வோர் பொருட்கள்
இந்தியாவில் சமீப காலமாக நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி செலவுகள் அதிகமாகும் காரணத்தால் அனைத்து தயாரிப்புகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது, இதனால் பெரும்பாலான மக்களின் வீட்டு பட்ஜெட்-ல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள காரணத்தால் விலை குறைவான பொருட்களையும், பிராண்டெட் இல்லாத பொருட்களையும் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
செப்டம்பர் காலாண்டு
செப்டம்பர் காலாண்டு முடிவில் சோப், பால் பொருட்கள், சமையல் எண்ணெய், வீட்டுச் சுத்திகரிப்புப் பொருட்கள் என வீட்டில் பயன்படுத்தக்கூடிய பல முக்கியமான பொருட்கள் பிரிவில் மக்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவன பொருட்களையோ அல்லது பிராண்டெட் இல்லாத பொருட்களையோ தான் வாங்குகின்றனர்.
விலை உயர்வு
பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனது விலை உயர்வைக் கட்டுப்படுத்திப் பழைய விலைக்கே விற்பனை செய்ய முடியும் அல்லது குறைவான விலை உயர்வை விதிக்க முடியும். இது பட்ஜெட் குடும்பங்களுக்குச் சாதகமாக இருக்கும் காரணத்தால் இத்தகைய பொருட்களை வாங்குகின்றனர், நிதி பிரச்சனை அதிகமாக இருக்கும் குடும்பங்கள் பிராண்டெட் இல்லாத பொருட்களை அதிகம் வாங்கத் துவங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று
இந்த மாற்றம் கொரோனா தொற்றுப் பாதிப்புத் துவங்கியதிலிருந்து இருக்கிறது, தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வாலும் இந்தச் செப்டம்பர் காலாண்டில் மோசமாகியுள்ளது.இந்த மாற்றம் கொரோனா தொற்றுப் பாதிப்புத் துவங்கியதில் இருக்கிறது, தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வாலும் இந்தச் செப்டம்பர் காலாண்டில் மோசமாகியுள்ளது.
விற்பனை அளவுகள் சரிவு
இதனால் சந்தையில் ஓரே பிரிவில் இருக்கும் அதிக விலை கொண்ட பொருட்களின் விற்பனை அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கடந்த 6 மாதத்தில் பல நுகர்வோர் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.