கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதிலும், இந்த நோயினை எப்படியேனும், நாட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என மருத்துவ துறை போராடி வருகிறது.
அதிலும் இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க உள்ள மருந்து நிறுவனங்கள் இந்த கொடிய வைரஸூக்கு, எப்படியேனும் தடுப்பு மருந்து கண்டு பிடித்தால் போதும் என பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகின்றன.
இந்த நிலையில் கொரொனாவின் தாக்கத்தினை முறியடிப்பதில் மருந்து உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அரசு நடவடிக்கை
இந்த நிலையில் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் போதுமான உள்நாட்டு உற்பத்தியை உறுதி செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கையினை தொடங்கியுள்ளது. மேலும் இந்திய மருந்தியல் துறை அதிகளவில் சீனாவினை நம்புவதை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கால் பங்கு சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருந்தியல் துறையினை ஊக்குவிப்பதற்காக 3,000 கோடி ரூபாய் நிதி முதலீட்டில் மூன்று Bulk Drug Parks உருவாக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசு உறுதி
இது தவிர 6,940 கோடி ரூபாய் Key Starting Materials மற்றும் Active Pharmaceutical Ingredients உள்ளிட்ட மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த அடுத்த எட்டு ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆக்டிவ் பார்மசூட்டிகல் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதில் இந்தத் துறைக்கு உதவுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பங்கு
உலகளாவிய மருந்து சந்தையில் தற்போது இந்தியா 20% பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் விற்கப்படும் ஒவ்வொரு மூன்றாவது மாத்திரையும் இந்தியாவில் இருந்து சப்ளை செய்யப்படுவது தான். இந்த நிலையில் அனைத்து ஏபிஐகள் தயாரிக்கும் திறமையும் இந்தியாவுக்கு உள்ளது. ஆக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டில் தொழில் துறையை ஊக்குவிக்கவும், மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக இழந்து வந்த ஆதிக்கத்தினை தொடர்ந்து பெறவும் இது உதவும்.
அரசு கோரிக்கை
ஆக இது வளர்ச்சிக்கான ஒரு படி தான். மேலும் ஏபிஐ.களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்களை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இத்துறை தலைவர்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.