டெல்லி : இந்திய ரயில்வே பயணிகள் ரயிலில் மட்டும் அல்ல, சரக்குகள் பரிமாற்றத்திலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து வர்த்தகமானது 8 சதவிகிதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே, பயணிகளை மட்டும் அல்ல, சரக்கு எடுத்து செல்வதிலும் முன்னணி வகித்து வந்த நிலையில், 2010க்கு பிறகு இப்படி ஒரு சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கொடுமை என்னவெனில் பிசியான சீசனில் கூட, அதுவும் 15 சதவிகித கூடுதல் கட்டணத்தை நீக்கியபோதும், சரக்கு ஏற்றி செல்வதில் 8 சதவிகித வீழ்ச்சி கண்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய்
ரயில்வே பயணிகள் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைத்தாலும், மறுபுறம், சரக்குப் போக்குவரத்தாலும் லாபம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரயில்வே துறையின் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் சரக்கு போக்குவரத்து வாயிலாகவே கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
கட்டணம் குறைப்பு இருந்த போதிலும் வீழ்ச்சி
இந்த சரக்கு போக்குவரத்தின் வாயிலாக தான், நிலக்கரி, பெட்ரோலியம், சிமெண்ட், உணவு தானியங்கள், இரும்பு, எஃகு, கண்டெய்னர்கள் போன்ற சரக்குகள் அதிகமான அளவில் சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால் ரயில்வேக்கு அதிக வருவாயும் கிடைக்கிறது. இதனால் சரக்குப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும் விதமாகவும், இன்னும் வருவாயை அதிகரிக்கும் விதமாகவும், கடந்த அக்டோபர் 1 முதல் சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் குறைக்கப்பட்டது.
8% வீழ்ச்சி
இதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 93.82 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி, இரும்பு, தாது, சிமெண்ட் ஆகியவற்றை பரிமாற்றம் செய்தது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 8 சதவிகிதம் குறைவாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அக்டோபரில் தான் சரக்குப் போக்குவரத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..
சரக்குகள் எடுத்து செல்லும் தூரமும் குறைவு
இந்த சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளதைப் போலவே, சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட தூரமும் சராசரியாக 11 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக நிலக்கரி போக்குவரத்து 12.2 சதவிகிதமும், எஃகு ஆலைகளுக்கான உதிரிப் பாகங்கள் போக்குவரத்து 8 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து மூலம் சரக்கு போக்குவரத்து
இதே உள்நாட்டு கண்டெய்னர் பிரிவில் 14 சதவிகிதமும், சிமெண்ட் பிரிவில் 14 சதவிகிதமும், உணவு தானியங்கள் 13.5 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதே போல் சாலைப் போக்குவரத்தில் சரக்குகள் அதிகமாக எடுத்துச் செல்லப்படுவதால் ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்தில் வளர்ச்சி
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகமாக ஏற்றப்பட்ட பொருட்களில் உரங்கள் 6.5 சதவிகிதம் அடங்கும். உள்நாட்டு நிலக்கரி மற்றும் இரும்பு சரக்கு போக்குவரத்து 7.6 சதவிகிதம் அதிகரித்தும், இதே இரும்பு தாது சரக்கு இருமடங்கு அதிகரித்தும், ஏற்றுமதி - இறக்குமதி கொள்கலன்கள் 6 சதவிகித வளர்ச்சியும் கண்டுள்ளது.
எடை அடிப்படையிலும் சரக்கு வீழ்ச்சி
இந்த நிலையில் மொத்தத்தில் ரயில்வே எடை டன் அடிப்படையில் கிட்டதட்ட 9 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மூலம் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 11.72 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கு காரணம் சாலைத் துறையில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே துறையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்ற நிலையில், இனியாவது அதிகரிக்கலாம் என்கிறார்கள் இத்துறை சார்ந்த அதிகாரிகள்.