2020ல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் உதவிய ஐபிஓ முதலீடுகள் 2021லும் களைக்கட்டத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இந்த வருடம் ஆரம்பமே அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியமான என்பிஎப்சி நிறுவனமான இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ வெளியிட உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு அடுத்தாகத் தற்போது இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது.
இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் ரயில்வே துறையின் நிதியியல் சேவை பிரிவாக இயங்குகிறது.
ரயில்வே துறைக்குத் தேவையானவற்றை வாங்குவது, ரயில்வே துறையின் சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது, ரயில்வே துறையின் கீழ் இருக்கும் பிற நிறுவனங்களை நிர்வாகம் செய்வது என மிகவும் முக்கியமான பணிகளைச் செய்கிறது.
2020 ஐபிஓ வெற்றியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் முதல் நிறுவனமாக இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் வருகிற ஜனவரி 18ஆம் ஐபிஓ வெளியிட உள்ளது.
இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் இந்த ஐபிஓ திட்டத்தின் வாயிலாகச் சுமார் 178.20 கோடி பங்குகளை விற்பனை செய்து சுமார் 4,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது. 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் பங்குகள் 25 முதல் 26 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் 25 முதல் 26 ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 575 பங்குகளை வாங்க வேண்டும். இந்த ஐபிஓ வில் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் சுமார் 16 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.