உலக ஆட்டோமொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக ரோபாட்களையும், தானியங்கி இயந்திரங்களையும் அதிகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் தயாரிப்புக்கு ரோபாட்டை பயன்படுத்துவது போய், இப்போது ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களைத் தயாரிக்கும் வேலையிலும் பல நிறுவனங்கள் களம் இறங்கி இருக்கின்றன.
சுருக்கமாக நாம் ஓட்டும் வாகனங்களையே முழுமையாக ரோபாட் போல மாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த காலத்தில், நம் இந்தியன் ரயில்வே நிர்வாகம் சோனாவை அழைத்து இருக்கிறார்கள்.
சோனா
சோனா 1.5 என்பது ஒரு ஹீயூமனாய்ட் ரோபாட்டின் பெயர். இந்த ரோபாட்டைத் தான், இந்திய ரயில்வே, தன் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலையில் பயன்படுத்த இருக்கிறார்கள். சோனா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோபாட்டாம். இது ஒரு முழு சேவை ரோபாட் என்கிறார்கள்.
அப்படி என்ன வேலை
சோனா 1.5 ரோபாட்டுக்கு பெரிய கடினமான வேலைகள் எல்லாம் கிடையாது. வெறுமனே டாக்குமெண்டுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது தான் வேலையாம். இந்த ரோபாட்டை புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலைகளில் மட்டும் பயன்படுத்துவதற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை.
வேறு வேலை
அது போக, தொழிற்சாலைகளுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, அவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த நுணுக்கமான விவரங்களை விவரிப்பது, புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவைகளைச் செய்யுமாம். இதை ரயில்வே நிர்வாகமே தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்கள்.
முதுகு எலும்பு
இந்த சோனா 1.5 ரோபாட்டுக்கு மனிதர்களைப் போல முதுகு எலும்பு போன்ற அமைப்பு வைத்து கட்டமைத்து இருக்கிறார்களாம். அதோடு நேவிகேஷன் மற்றும் மேப்பிங் போன்றவைகளையும் ப்ரோகிராம் செய்து இருக்கிறார்களாம். இந்த ரோபாட்டை கணிணி, ஸ்மார்ட்ஃபோன் என எதை வைத்து வேண்டுமானாலும் இயக்கலாமாம்.
பேட்டரி
மிக முக்கியமாக இந்த ரோபாட்டில் சார்ஜ் தீர்ந்து விட்டால் ஒரு மனிதர் தான் இந்த ரோபாட்டுக்கு சார்ஜ் போட வேண்டும் என அவசியம் இல்லை. சோனா ரோபாட்டே தன் சார்ஜ் தீருவதற்கு முன், தன்னை சார்ஜ் செய்து கொள்ளும். மற்ற படி வழக்கம் போல இருட்டிலும் வேலை செய்யும் சென்சார், அல்ட்ரா சோனிக், டச் வசதி, லேசர் என பல வசதிகள் இந்த சோனாவில் இருக்கிறதாம்.