கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக விளங்கும் இந்திய ரயில்வே துறை பயணிகள் சேவை பிரிவு வர்த்தகப் பாதிப்பால் சுமார் 35,000 முதல் 40,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருவாய் பாதிப்புகளைச் சமாளிக்க இந்திய ரயில்வே துறை மாற்றுத் திட்டத்தைக் கையில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா பாதிப்பால் முடங்கிய நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடைப்பயணமாகவே சென்ற நிலையில், இந்திய ரயில்வே துறை இவர்களைச் சொந்த ஊரில் சேர்க்கப் பெரிய அளவில் உதவியது. பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்குச் சென்றதைப் பார்த்தோம்.
இதேபோல் கொரோனா சிகிச்சைக்காக ரயில்கள் மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுப் பல ஆயிரம் பேர் தற்போது ரயில் பெட்டியில் கொரோனாவுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரூ.40,000 கோடி வருவாய் பாதிப்பு
இந்தக் கொரோனா காலத்தில் இந்திய ரயில்வே துறை மிகவும் குறைந்த அளவிலான ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது. இப்படி இயக்கி வரும் ரயில்களிலும் பயணிகள் முழுமையாக நிரம்புவது இல்லை. இந்த நிலை கொரோனா பாதிப்பு முழுமையாகக் கடந்த பின்பு தான் மாறும்.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் பயணிகள் சேவை பிரிவில் மட்டும் இந்திய ரயில்வே துறை சுமார் 35,000 முதல் 40,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.
மாற்றுத்திட்டம்
இந்த 40,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பாதிப்பை இந்திய ரயில்வே துறை சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிப்பது மூலம் சரி செய்யத் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை 27 வரையில் 3.13 மில்லியன் டன் அளவிலான பொருட்களைச் சரக்கு போக்குவரத்துத் துறை ஈர்த்துள்ளது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 3.12 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
50 சதவீத இலக்கு
இந்தியாவில் தற்போது 230 ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது, அதுவும் முழுவதுமாகப் பயணிகள் நிரம்புவது இல்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் பயணிகள் பிரிவு வர்த்தகத்தில் 10 முதல் 15 சதவீத வருவாய் பாதிப்பு ஏற்படும், இது கிட்டத்தட்ட 35,000 முதல் 40,000 கோடி ரூபாய் அளவில் இருக்கும்.
இந்தப் பாதிப்பைச் சரக்குப் போக்குவரத்தைக் கடந்த நிதியாண்டை விடவும் 50 சதவீதம் அதிகச் சரக்குகளை ஈர்ப்பது மூலம் சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகக் குழு தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.
மேம்பாடுகள்
இந்திய ரயில்வே துறையில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்கள் ஈர்க்கவும் பல்வேறு சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பையும் கடந்த வருடம் அறிவித்திருந்தது.ட
மேலும் சரக்கு ரயிலின் சராசரி வேகத்தை 23.22 kmph-ல் இருந்து தற்போது 45.03 kmphஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.